Home இலங்கை அரசியல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : விஜித ஹேரத்தின் சவாலுக்குப் பதிலளிக்கவுள்ள உதய கம்மன்பில

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : விஜித ஹேரத்தின் சவாலுக்குப் பதிலளிக்கவுள்ள உதய கம்மன்பில

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரை வெளியிடப்படாத ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகளை வெளியிடுமாறு அமைச்சர் விஜித ஹேரத்தின்  (Vijitha Herath) சவாலுக்கு பதிலளிக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.

விஜித ஹேரத் நேற்று (15) விடுத்த குறித்த சவாலுக்கு விசேட செய்தியாளர் சந்திப்பொன்றினூடாக இன்று (16) பதிலை வழங்க உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சனல் 4 அறிக்கை மற்றும் குறித்த தாக்குதல் தொடர்பில் புலனாய்வு அமைப்புகள் செயற்பட்ட விதம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பக்கங்கள் காணாமல் போனமை தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் கடந்த வாரம் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கூறியிருந்தார்.

ஜனாதிபதியின் வசமுள்ள அறிக்கைகள்

எனினும், இது தொடர்பில் நேற்று முன்தினம் (14) ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, விசாரணை அறிக்கையில் எந்த பக்கங்களும் காணாமல் போகவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், இதுவரையில், வெளியிடப்படாத ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான இரண்டு அறிக்கைகள் ஜனாதிபதியின் வசமுள்ளதாகவும், 7 நாட்களுக்குள் ஜனாதிபதி அவற்றைப் பகிரங்கப்படுத்தாவிட்டால் தாம் அவற்றை வெளியிடத் தயாராக உள்ளதாகவும் நேற்று முன்தினம் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

அமைச்சரவை தீர்மானங்கள்

இந்தநிலையில் நேற்று (15) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து கருத்து வெளியிட்ட அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத், 3 நாட்களுக்குள் குறித்த அறிக்கைகளை வெளியிடுமாறு, உதய கம்மன்பிலவுக்கு சவால் விடுத்திருந்தார்.

இதனையடுத்து, இந்த சவால் தொடர்பில் இன்றைய தினம் உரிய பதிலை வழங்குவதாக முன்னாள் உதய கம்மன்பில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/april-attack-vijitha-herath-challenge-to-udaya-1729050940

NO COMMENTS

Exit mobile version