Home இலங்கை அரசியல் பிரிக்ஸ் மாநாட்டில் இலங்கையும் பங்கேற்பு: ஜனாதிபதி பங்கேற்க மாட்டார்

பிரிக்ஸ் மாநாட்டில் இலங்கையும் பங்கேற்பு: ஜனாதிபதி பங்கேற்க மாட்டார்

0

Courtesy: Sivaa Mayuri

 ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அழைப்பின் பேரில் அக்டோபர் 22-24 வரை நடைபெறவுள்ள பிரிக்ஸ் (பிரேசில், ரஸ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா) உச்சிமாநாட்டில் இலங்கையின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

ஜனாதிபதி கலந்து கொள்ள மாட்டார்

எவ்வாறாயினும், தேசிய மக்கள் சக்தியின் அரசியல் தலைமைகள் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பதால் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவின் பொருளாதார ரீதியாக செல்வந்த நாடுகளின் அரசியல் மற்றும் பொருளாதார சக்திக்கு சவால் விடும் வகையில் பொருளாதார ரீதியாக வளரும் நாடுகளை ஒன்றிணைக்க பிரிக்ஸ் உருவாக்கப்பட்டது.

அந்த வகையில் 2024 பிரிக்ஸ் மாநாட்டிற்கு ரஸ்யா தலைமை வகிக்கிறது.

ரணில் அரசாங்கத்தின் பரிந்துரை

இதில் கலந்துகொள்வதற்கான அழைப்பிதழை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் ரஸ்ய தூதுவர் ஏற்கனவே கையளித்திருந்தார்.

இதற்கிடையில் ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சரவை பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினராக விண்ணப்பிக்க பரிந்துரைத்தது. எனினும் உறுப்பினர் சேர்க்கை இன்னும் நிலுவையில் உள்ளது.

இதேவேளை பிரிக்ஸ் அமைப்பின் புதிய உறுப்பு நாடுகளாக எகிப்து, ஈரான், எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்பன இணைந்துள்ளன.  

NO COMMENTS

Exit mobile version