Home முக்கியச் செய்திகள் யாழ்.சாவகச்சேரி வைத்தியசாலைக்கு டக்ளஸ் அதிரடி விஜயம்: மக்கள் விடுத்த எச்சரிக்கை

யாழ்.சாவகச்சேரி வைத்தியசாலைக்கு டக்ளஸ் அதிரடி விஜயம்: மக்கள் விடுத்த எச்சரிக்கை

0

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் (Chavakachcheri Base Hospital) வைத்தியர்கள் கடந்த இரு தினங்களாக வைத்திய சேவைகளை புறக்கணித்து வரும் நிலையில் கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.

இன்று (06) காலை 6.30 மணியளவில் அங்கு விஜயம் செய்து வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனாவுடன் வைத்தியசாலை நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, வைத்தியசாலையை மேம்படுத்த தன்னால் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளின் போது ஒரு சில வைத்தியர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் இன்று வைத்தியசாலையை இவ்வாறானதொரு இக்கட்டான நிலைமைக்கு கொண்டு சென்றிருப்பதாகவும் வைத்திய அர்ச்சுனா, அமைச்சருக்கு தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் எச்சரிக்கை

மேலும், வைத்தியர்களின் பணிப் புறக்கணிப்புக் காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களாக தனி ஒரு வைத்தியராக நின்று வைத்தியசாலையை இயங்க வைத்து நோயாளர்களை காப்பாற்றி வருவதாகவும் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்திருந்தார்.

அத்துடன், வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவு மற்றும் சத்திரசிகிச்சைக் கூடம் ஆகியவற்றை இயங்க வைக்கக்கூடிய சாத்தியப்பாடுகள், ஆளணி காணப்படுவதாகவும் வைத்திய அத்தியட்சகர் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார்.

இதன்போது, அங்கு கூடிய பொதுமக்கள் “வைத்தியசாலை இன்று இரவுக்குள் வழமை போன்று இயங்க வேண்டும் இல்லையேல் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனாவுக்கு ஆதரவளித்தும், வைத்தியசாலையை இயக்கக் கோரியும் மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம்“ என எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/mg1Zi-hwDPU

NO COMMENTS

Exit mobile version