Home இலங்கை அரசியல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வசமானது மன்னார் பிரதேச சபை

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வசமானது மன்னார் பிரதேச சபை

0

மன்னார் (Mannar) பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (All Ceylon Makkal Congress) கட்சி உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஜப்ரான் தெரிவாகியுள்ளார்.

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான
அமர்வு இன்று (24) காலை 8.30 மணியளவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்
தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.

தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில்,
இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர் கிறிஸ்ரி றெவல் மற்றும் அகில
இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஜப்ரான் ஆகியோரது பெயர்கள்
முன் மொழியப்பட்டது.

தவிசாளர் தெரிவு

இதன்போது சபையில் உள்ள 22 உறுப்பினர்களும் பகிரங்க வாக்கெடுப்பை
கோரியிருந்ததற்கு அமைய தமிழரசுக் கட்சி உறுப்பினர் கிறிஸ்ரி றெவலுக்கு ஆதரவாக 09
வாக்குகளும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஜப்ரானுக்கு ஆதரவாக 13 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஜப்ரான் மன்னார் பிரதேச சபையின்
தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் உப தவிசாளர் தெரிவு இடம்பெற்ற போது உப தவிசாளர் தெரிவிற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்
றொயிட்டன் சாந்தினி குரூஸ் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்
இஸ்மாயில் முஹம்மது இஸ்ஸதீன் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டது.

கட்சிகள் ஆதரவு

பகிரங்க வாக்கெடுப்பு நடந்த நிலையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் றொயிட்டன் சாந்தினி
குரூஸிற்கு15 வாக்குகளும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்
இஸ்மாயில் முஹம்மது இஸ்ஸதீனுக்கு 07 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் உப தவிசாளராக றொயிட்டன் சாந்தினி குரூஸ் தெரிவு செய்யப்பட்டார்.

இவருக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி, அகில இலங்கை தமிழ்
காங்கிரஸ், சுயேட்சைக்குழு ஆகியவற்றின் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தமை
குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version