Home இலங்கை அரசியல் ஜனாதிபதியின் உத்தரவை நிராகரித்த தேர்தல்கள் ஆணையகம்

ஜனாதிபதியின் உத்தரவை நிராகரித்த தேர்தல்கள் ஆணையகம்

0

Courtesy: Sivaa Mayuri

மாகாண ஆளுநர்களின் மேற்பார்வையின் கீழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களால் மேற்பார்வையிடப்படும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஜனாதிபதியின் உத்தரவை, இலங்கையின் தேர்தல் ஆணையகம் நிராகரித்துள்ளது.

ஆளுநர்கள் அரசியல் ரீதியாக நியமனம் செய்யப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் இதுபோன்ற நடவடிக்கைகள் தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் அமையும் என்று தேர்தல்கள் ஆணையகம் கருதுகிறது.

பரவலாக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி

முன்னதாக, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து செயலிழந்து போன அபிவிருத்தி திட்டங்களின் செயற்பாடுகளை மாகாண ஆளுநர்களின் ஒருங்கிணைப்பின் கீழ் தொடரக்கூடிய முறையான பொறிமுறையை வகுக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு ஜனாதிபதியின் செயலாளர் அறிவுறுத்தியிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட பரவலாக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதிகளின் மூலம் இந்த திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

ஏற்கனவே யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய ஐந்து வடமாகாண மாவட்டங்களில் அடுத்த வாரம் அபிவிருத்திக்கான கூட்டங்களை நடத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தபோதும், தேர்தல் ஆணையகத்தின் தலையீட்டினால் அது கைவிடப்பட்டன.

இந்தநிலையில், நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லலாம் என மாவட்டச் செயலாளர்களுக்கு, தேர்தல்கள் ஆணையகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version