Home உலகம் இலங்கை – இந்திய கப்பல் சேவை மீள ஆரம்பிக்கப்படும் காலம் அறிவிப்பு

இலங்கை – இந்திய கப்பல் சேவை மீள ஆரம்பிக்கப்படும் காலம் அறிவிப்பு

0

இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்த்ஸ்ரீ படகுசேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சோ.நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக மையத்தில் இன்று(02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “40 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா – இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவைகளை மீள ஆரம்பிக்கும் வகையில் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பித்து வைத்தார்.

ஆரம்ப திகதி

எனினும், இந்த சேவையைத் தொடர்வதில் இயற்கையான தொழில்நுட்ப விடயங்கள் சில தடைகளாக அமைந்திருந்தன.

இந்நிலையில் தற்போது இந்த்ஸ்ரீ படகுசேவை தனியார் நிறுவனம் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் மீளவும் கப்பல்சேவை ஆரம்பித்து தொடரவுள்ளது.

அந்த வகையில் மீளவும் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்துக்கும், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கும் மனமார்ந்த நன்றிகளை இந்த்ஸ்ரீ படகுசேவை தனியார் நிறுவனம் தெரிவித்துக்கொள்கின்றது.

கட்டணம்

நாகப்பட்டினத்துக்கும், காங்கேசன் துறைக்கும் இடையிலான கப்பல் சேவைக்காக ‘சிவகங்கை’ எனும் கப்பல் பயன்படுத்தப்படவுள்ளது.

150 பயணிகள் பயணிப்பதற்கான வசதிகளை கொண்ட இந்த கப்பலில் பயணிப்பதற்கு இருவழி கட்டணமாக வரிகள் உள்ளடக்கப்பட்டு 34,200ரூபாவை (8400இந்திய ரூபா) அறவிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.

Source: https://ibctamil.com/article/ferry-service-between-sri-lanka-india-start-again-1714657490

NO COMMENTS

Exit mobile version