Home உலகம் அமெரிக்காவின் கறுப்பு நாள்: உலகை உலுக்கிய இரட்டை கோபுர தாக்குதலின் 23வது ஆண்டு நினைவுதினம்

அமெரிக்காவின் கறுப்பு நாள்: உலகை உலுக்கிய இரட்டை கோபுர தாக்குதலின் 23வது ஆண்டு நினைவுதினம்

0

உலகையே உலுக்கிய அமெரிக்க (USA) இரட்டைக்கோபுர பயங்கரவாத தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 23 ஆண்டுகள் கடந்துள்ளன.

2001 செப்டம்பர் 11 அன்று காலை சுமார் 8.45 மணிக்கு, அல் கொய்தா பயங்கரவாதிகள் உலக வர்த்தக மையத்தின் மீது விமானங்கள் கொண்டு தாக்குதல் நடத்தினர்.

பலரது உயிரை பலிகொண்ட இந்த கொடூர சம்பவத்துக்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இரட்டை கோபுர தாக்குதல்

2001 செப்டம்பர் 11 அன்று காலை பயங்கரவாதிகள் உலக வர்த்தக மையத்தின் மீதும் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன்(The Pentagon) மீது விமானங்கள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நான்கு அமெரிக்க விமானங்களை அல்கொய்தா பயங்கரவாத அமைப்பைச் சார்ந்த 19 பேர் கடத்தினார்கள்.

இரண்டு விமானங்கள் நியூயார்க் நகரத்தில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டைக் கோபுரங்களின் மீதும், ஒரு விமானம் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க இராணுவத் தலைமையிடமான பென்டகன் மீதும் மோதியிருந்தன.

நான்காவது விமானம் கட்டுப்பாடு இழந்து பென்சில்வேனியாவில் உள்ள வெட்டவெளியில் தரையில் மோதி வெடித்துச் சிதறியது.

விடை தெரியாத மர்மம்

இந்த விமானம் தாக்கச் சென்ற இடம் எது என விடை என்பது இப்போது வரை மர்மமாகவே உள்ளது.

கிட்டத்தட்ட 3,000 பேர் வரை அதில் கொல்லப்பட்டதுடன், வர்த்தக மையத்தின் 110-அடுக்கு இரட்டைக் கோபுரங்கள் தகர்ந்து தரைமட்டமாகின.

இதற்கிடையில் குறித்த தாக்குதலுக்கு அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த புஷ் தான் காரணம் என அமெரிக்காவைச் சேர்ந்த சிலர் குற்றம் சாட்டினர்.

இது குறித்த சில ஆவணப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதேசமயம் அல் கொய்தா அமைப்பின் தலைவன் ஒசாமா பின் லேடனை பிடித்து கொடுப்பவர்களுக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை சன்மானமாக வழங்குவதாக ஓர் அறிவிப்பை எப்பிஐ அப்போது வெளியிட்டிருந்தது.

அமெரிக்காவின் கறுப்பு தினம்

இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு காரணமான அல்கொய்தா தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்கா அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு, ஆப்கானிஸ்தானில் அடைக்கலம் கொடுத்திருந்த தலிபான்கள் மீது போர் தொடுத்தது.

அல்கொய்தா தலைவன் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார்.

இதனையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம்திகதி இரட்டை கோபுரம் இருந்த இடத்தில், மீண்டும் புதிய வர்த்தக மையக் கட்டிடமொன்று திறக்கப்பட்டது.

அதேசமயம் பென்டகன் மற்றும் சாங்ஸ்வில் பகுதியில் இத் தாக்குதல் தொடர்பான நினைவு மையங்களும் திறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version