Home இலங்கை அரசியல் 80ஆயிரம் அரச ஊழியர்களுக்கு 10ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு! இது அரசியல் அல்ல..

80ஆயிரம் அரச ஊழியர்களுக்கு 10ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு! இது அரசியல் அல்ல..

0

அரசாங்க ஊழியர்களுக்கு 25,000 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்கும் முடிவு தேர்தலுக்கான வாக்குறுதியல்ல, அது வெறும் ஜனரஞ்சக வார்த்தையுமல்ல என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதனை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது.  இதில் எந்த அரசியலும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் வாக்குறுதியா..

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

எதிர்காலத்தில் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அது தேர்தல் வாக்குறுதியா என்றும் அவர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

நாம் 2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நாட்டிலுள்ள 13 இலட்சத்து 80,000 அரசாங்க ஊழியர்களுக்கும் 10,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கினோம்.

ஓய்வூதியம் பெறுவோரின் கொடுப்பனவுகளையும் அதிகரித்தோம். அவர்களுக்கு மேலும் 3,000 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அரசாங்கத்தின் திட்டங்கள் மூலமான நடவடிக்கைகள்.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை மேற்கொண்டார்.

நாட்டு மக்களின் வாழ்வாதார நெருக்கடியை நாம் உணர்ந்து கொண்டுள்ளோம். வரிச்சுமையும் காணப்படுவதால் வரிகளை குறைக்க வேண்டியுள்ளது.

முடியுமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் அதனை மேற்கொள்வது அவசியம்.

நாட்டு மக்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு அவர்களுக்கான சக்தியை பெற்றுக்கொடுப்பது அவசியம்.

அதனைக் கவனத்திற்கொண்டே உதய ஆர். செனவிரத்ன குழு நியமிக்கப்பட்டது. அந்த குழுவில் எந்த அரசியல்வாதிகளும் பங்கேற்கவில்லை. நிதியமைச்சு உட்பட அரச அதிகாரிகளே இடம் பெற்றனர்.

அந்தக் குழு இடைக்கால அறிக்கையொன்றை சமர்ப்பித்தது.

சம்பள அதிகரிப்பு

எதிர்காலத்தில் எவ்வாறு சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள முடியும் என்பது தொடர்பான பரிந்துரை அதில் உள்ளடக்கப்பட்டது. அந்த இடைக்கால அறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

அந்த இடைக்கால அறிக்கையில் தற்போதுள்ள அனைத்து வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுகளும் ஒன்றிணைக்கப்பட்டு 25,000 ரூபா வாழ்க்கை செலவு கொடுப்பனவு அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றுள்ளதால் திறைசேரி 2024 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கி அதனை வழங்குவதற்கான முன்னோடித் திட்டங்களை மேற்கொண்டுள்ளது.

திறைசேரியின் செயலாளரும் அமர்ந்திருந்த குழுவிலேயே இந்த திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டு இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் 24% அதிகரிப்பு அடுத்த வரவு செலவு திட்டத்தில் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் முகாமைத்துவம் செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட முடிவுகளே தவிர ஜனரஞ்சக வார்த்தைகள் அல்ல.

நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தது. ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணும் போது மற்றொரு பிரச்சினை தலையெடுத்தது. நாம் அவை அனைத்தையும் மிகுந்த கவனத்துடன் கையாண்டோம்.

அதன் ஒரு அம்சமாகவே பராட்டே சட்டத்தை நாம் இடைநிறுத்தினோம்.

வாரத்திற்கு ஒரு தடவை நாட்டின் நிதி சபை, நிதி அமைச்சின் விசேட குழு ஆகியவை ஒன்று கூடி இவற்றில் அவதானம் செலுத்தியது.

வர்த்தக சமூகத்தின் நலன் கருதி சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

இத்தகைய பின்னணியில், தற்போது மேடைகளில் உரையாற்றுபவர்கள் காலையில் வரிகளை குறைக்கப் போவதாக தெரிவிக்கின்றனர் பாராட்டே சட்டத்தை இடைநிறுத்தியமை தொடர்பில் பேசுகின்றனர். இது விந்தையாகவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version