டிட்வா சூறாவளியின் பின்னர் மூடப்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று(16) திறக்கப்பட்டாலும் மீண்டும் பண்டிகையை முன்னிட்டு மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று(16) திறக்கப்படும் பாடசாலைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மீண்டும் மூடப்படவுள்ளன.
மீண்டும் 29 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
விடுமுறை அறிவிப்பு
இதனையடுத்து அனைத்து பாடசாலைகளும் மீண்டும் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இடைநிறுத்தப்பட்டுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை கருத்திற்கொண்டு இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சையை கருத்திற்கொண்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 02 ஆம் திகதி வரை மீண்டும் பாடசாலைகள் மூடப்படவுள்ளன.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான அழுத்தம்
அத்துடன், பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மாணவர்கள் வழக்கமான தமது பாடசாலைக்குச் செல்வது அவசியமில்லை எனவும் தமது வீட்டுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்குச் செல்ல முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய இயற்கை
பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான அழுத்தத்தைக்
குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாணவர்கள் பாடசாலை சீருடை அணிய வேண்டிய அவசியமில்லை, மேலும் இந்தக்
காலகட்டத்தில் ஆசிரியர்களும் முறையான உடையை அணிய வேண்டிய அவசியமில்லை.
பாடசாலைகள் மூடப்படுவதால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், வழக்கமான பாடசாலைகள்
எதுவாக இருந்தாலும், வழக்கமான செயல்பாடுகள் மீண்டும் தொடங்கும் வரை, தங்கள்
வீட்டிற்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று
அதிகாரிகள் தெரிவித்தனர்.
