வலுசக்தி துறைக்கான புதிய ஒழுங்குமுறைப்படுத்தல் நிறுவனமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வலுசக்தி, மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) சமர்ப்பித்த யோசனைக்கு நேற்று (25) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல், விமானங்களுக்கான எரிபொருள், திரவப் பெற்றோலிய வாயு (LPG) மற்றும் உராய்வு எண்ணெய் உள்ளிடட பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி நிறுவனம், சுத்திகரித்தல், விநியோகித்தல் மற்றும் சந்தைப்படுத்தல் போன்றன தற்போது காணப்படுகின்ற சட்டங்களுக்கமைய மேற்கொள்ளப்பட்டாலும், இத்துறையில் விரிவான ஒழுங்குமுறைப்படுத்தல் பொறிமுறையொன்று இல்லை.
ஒழுங்குமுறைப்படுத்தல் பொறிமுறை
தனியார் நிறுவனங்கள் பல பெட்ரோலிய உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற நிறுவனங்கள் பலவும் தொடர்புபடுவதால், இத்துறையில் ஏற்படுகின்ற சவால்களுக்கு தீர்வு காணல், உற்பத்திகளின் தரங்களை அதிகரித்தல் மற்றும் வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ஏனைய தரப்பினர்களின் தேவைகளைப் பாதுகாப்பதற்காக சுயாதீன, ஆற்றல்மிக்க, பயனுள்ள மற்றும் வினைத்திறனான ஒழுங்குமுறைப்படுத்தல் பொறிமுறைக்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது.
அதனால், அதுதொடர்பான விடயங்களை ஆராய்ந்து விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கும், சட்டங்களைத் தயாரிப்பதற்கும் வலுசக்தி, மின்சக்தி அமைச்சின் செயலாளரின் தலைமையிலான குழு ஒன்றை நியமிப்பதற்காக வலுசக்தி, மின்சக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/introducing-new-regulatory-body-for-energy-sector-1714126059
