இலங்கைக்கான (Sri Lanka) உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்ட ஈரான் (Iran) அதிபர் இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi ) இன்று (24) அதிபர் ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) சந்தித்துள்ளார்.
கொழும்பிலுள்ள அதிபர் செயலகத்தில் சற்றுமுன்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இப்ராஹிம் ரைசி தலைமையிலான தூதுக்குழுவினர் மற்றும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினருக்கிடையிலான இருதரப்பு சந்திப்புக்களை தொடர்ந்து, இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அதிபரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஈரான் அதிபரின் பயணம்
கடந்த 2008 ஆம் ஆண்டு அப்போதைய ஈரான் அதிபர் இலங்கைக்கு பயணம் செய்திருந்த நிலையில், 16 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதைய அதிபரை இலங்கைக்கு பயணம் செய்யுமாறு ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில், இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்த இப்ராஹிம் ரைசி, உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து, இப்ராஹிம் ரைசி தலைமையிலான தூதுக்குழுவினர், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினருடன் இருதரப்பு உறவுகள் தொடர்பில் பேச்சுக்களை முன்னெடுத்திருந்தனர்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
இதையடுத்து, சற்றுமுன்னர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து அவர் பேச்சுக்களை முன்னெடுத்துள்ளதாக அதிபரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் போது, இரண்டு நாடுகளுக்கிடையிலான சுற்றுலாத்துறை, விஞ்ஞானம், தொழி்ல்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்துவது தொடர்பான ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/iranian-president-ebrahim-raisi-meet-sl-prez-ranil-1713969245
