Home இலங்கை அரசியல் ஜெயசங்கரினால் டக்ளஸ் தேவானந்தாவுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அழைப்பு

ஜெயசங்கரினால் டக்ளஸ் தேவானந்தாவுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அழைப்பு

0

புதுடெல்லிக்கு வருமாறு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெயசங்கரினால்(S. Jaishankar) தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தடைப்பட்டு இருக்கின்ற இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுக்களை மீண்டும் முன்னெடுத்து, இந்தியக் கடற்றொழிலாளர்கள் விவகாரத்தினை தீர்ப்பதற்கும் இந்திய வெளியுறவு அமைச்சர் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இணைத் தலைவர் பி.எஸ். எம். சார்ள்ஸ் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று(05.07.2024) இடம்பெற்றது.

 சட்டவிரோத செயற்பாடு

குறித்த கூட்டத்தில், மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்ட போது, இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத செயற்பாடு காரணமாக பாதிக்கப்படும் தங்களுடைய வாழ்வாதாரம் தொடர்பாக போதிய கரிசனை வெளிப்படுத்தப்படுவதில்லை என்ற ஆதங்கத்தினை வெளிப்படுத்திய கடற்றொழிலாளர் பிரதிநிதிகள், அண்மையில் இலங்கைக்கு வந்த இந்திய வெளியுறவு அமைச்சரை சந்தித்த போதுகூட தமிழ் மக்களின் பிரதிநிதிகளினால் கடற்றொழிலாளர் விவகாரம் பேசப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்திருந்தனர்.

இந்நிலையிலேயே தனக்கும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பில் கடற்றொழிலாளர் விவகாரம் விரிவாக பேசப்பட்டமையை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், மாவட்டத்தில் காணப்படும் போதைப் பொருள் பரவல் மற்றும் சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்தல், வீதி விபத்துக்களை குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெடுப்புக்கள் போன்றவை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

322 மில்லியன் நிதி

அதேபோன்று, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண திணைக்களங்களினால் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத் திட்டங்களை ஆராய்ந்து சரியானவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டதுடன், கடந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட விடயங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

மேலும், யாழ். மாவட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 322 மில்லியன் நிதியின்மூலம் மேற்கொள்ளப்படும் மற்றும்
முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களை வினைத்திறனாக
நடைமுறைபடுத்து தொடர்பிலும் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,பதில் அரசாங்க அதிபர் பிரதீபன்,
மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரீமோகன், பிரதேச சபைகளின் செயலாளர்கள், பிரதேச
செயலாளர்கள், துறைசார் அரச நிறுவனங்களின் அதிகாரிகள் பாதுகாப்பு தரப்பினர்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்துவருகின்றமை
குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version