Home இலங்கை அரசியல் தமிழ் கட்சிகளின் ஒற்றுமை தொடர்பில் கலந்துரையாடிய ஜூலி சங்

தமிழ் கட்சிகளின் ஒற்றுமை தொடர்பில் கலந்துரையாடிய ஜூலி சங்

0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்பட்ட தமிழ்க் கட்சிகள் ஒற்றுமையாக செயற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள்
முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நேற்று (24.10.2024) யாழ்ப்பாணத்தில் சந்தித்த போதே அவர் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்ட தமிழ்க் கட்சிகள் ஏன் பிரிந்து
நிற்கின்றன? இவர்களால் ஒற்றுமையாகச் செயற்பட முடியாதா? அதற்கான சாத்தியங்கள்
இருக்கின்றனவா?” என ஜூலி சங் வினவியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த கஜேந்திரகுமார்,

“எங்களைப் பொறுத்தவரையில் ஒற்றையாட்சி
மற்றும் 13 ஆவது திருத்தம் போன்ற விடயங்களால்தான் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பில் இருந்து பிரிய வேண்டி வந்தது.

மக்கள் விடுதலை முன்னணி

அந்த நிலைப்பாட்டில் நாங்கள்
தொடர்ந்தும் இறுக்கமாக இருந்து வருகின்றோம். ஆனால், மற்றக் கட்சிகள் ஏன்
பிரிந்து நிற்கின்றன என்பது எங்களுக்கும் விளங்கவில்லை.

கொள்கையளவில் இவர்களுக்கிடையில் எந்தவித வேறுபாடுகளும் இல்லை. ஆனாலும்,
அவர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளை அவர்களிடம் தான் நேரடியாகக் கேட்க
வேண்டும்” என பதிலளித்துள்ளார். 

இந்தச் சந்திப்பின்போது தமிழ் மக்கள் விடயத்தில் ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசின் போக்கு தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி
சங், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்குப் பதிலளித்த அவர், இந்த அரசு தேசிய மக்கள் சக்தியாக
அடையாளப்படுத்தப்படினும், அரசியல் ரீதியான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான சகல
அதிகாரங்களும் மக்கள் விடுதலை முன்னணி வசமே இருக்கின்றன என்று
சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று அரசமைப்புக்கான 13ஆவது திருத்தம் மற்றும் தமிழர்களுக்கான அரசியல்
தீர்வு குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின்
சில்வாவினால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்தை மேற்கோள்காட்டிய
கஜேந்திரகுமார், இவ்வாறானதொரு பின்னணியில் இந்த அரசிடம் இருந்து
முன்னேற்றகரமான நகர்வுகளை எதிர்பார்க்க முடியும் எனத் தாம் கருதவில்லை என்றும்
குறிப்பிட்டுள்ளார் .

கொள்கை மாற்றம்

மேலும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் பற்றிய அமெரிக்கத் தூதுவரின்
கேள்விக்குக் கஜேந்திரகுமார் பதிலளிக்கையில், “ஏற்கனவே நடைபெற்றுமுடிந்த
ஜனாதிபதித் தேர்தலில் தெற்கில் பதிவான மாற்றம், எதிர்வரும் நாடாளுமன்றத்
தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் பதிவாகும்.

இருப்பினும், அந்த
மாற்றம் தேசிய மக்கள் சக்திக்குச் சாதகமானதாக இருக்காது. மாறாக எமக்குச்
சாதகமான, எம்மை நோக்கிய மாற்றமாகவே இருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, “கடந்த காலங்களைப் போலன்றி, நாம் நாடாளுமன்றத்துக்குத் தெரிவானதில்
இருந்து சகல தமிழ்த் தேசிய கட்சிகளும் ‘தேசியம்’ என்ற கொள்கையையும், முழுமையான
சமஷ்டி தீர்வையும் முன்னிறுத்தி செயற்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

எனவே, நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் ஒற்றையாட்சி மற்றும் அரசமைப்புக்கான 13ஆவது திருத்தம் என்பவற்றைப் புறக்கணித்து, முழுமையான சமஷ்டி தீர்வை சகலரும்
வலியுறுத்தும் சாத்தியம் உருவாகும் என்றும் கஜேந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.

அதுமாத்திரமன்றி இவ்வாறானதொரு சூழ்நிலை தோற்றம் பெறும் பட்சத்தில், அந்தக்
கொள்கை மாற்றத்தை அமெரிக்கா அதன் கொள்கையில் உள்வாங்க வேண்டும் எனவும், அதற்கு
அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டும் எனவும் அமெரிக்கத் தூதுவரிடம்
கஜேந்திரகுமார் கேட்டுக்கொண்டார்.

அதனை ஏற்றுக்கொண்ட அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங், எதிர்வரும் தேர்தலில் அரசியல்
தீர்வு குறித்து தமிழ் மக்கள் தமது வாக்குகள் மூலம் வெளிப்படுத்தும்
நிலைப்பாட்டுக்குப் புறம்பாகத் தாம் ஒருபோதும் செயற்படமாட்டோம் என்றும்
உறுதியளித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version