Home இலங்கை குற்றம் வவுனியாவில் இருந்து குடும்ப பெண் கடத்தல்: வானுடன் 4 பேர் கைது

வவுனியாவில் இருந்து குடும்ப பெண் கடத்தல்: வானுடன் 4 பேர் கைது

0

வவுனியாவில் இருந்து குடும்ப பெண் ஒருவர் கடத்தப்பட்ட நிலையில் அவர்
மீட்கப்பட்டதுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று(29.08.2024) இடம்பெற்றுள்ளது.

வவுனியா, கொக்குவெளி, அரசடி வீதியில் வசித்து வந்த குடும்ப பெண் ஒருவரை
யாழ்ப்பாணத்தில் இருந்து வான் ஒன்றில் வந்த குழுவினர் கடத்திச் சென்றுள்ளனர்.

கைது நடவடிக்கை

வீட்டில் இருந்த பெண்ணின் மாமியார் பெண்ணை தூக்கிச் சென்றவர்களை விரட்டிய போது
அவரை தாக்கி விட்டு சென்றுள்ளனர்.

இதையடுத்து, பெண்ணின் மாமியார் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவில்
செய்த முறைப்பாட்டுக்கு அமைய, பொலிஸ் குழுவினர்
விசாரணைகளை விரைந்து முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், பொலிஸார் குறித்த வாகனம் சென்ற பாதையை பின்
தொடர்ந்து சென்று பளைப் பகுதியில் வைத்து மடக்கிப்
பிடித்துள்ளதுடன், குறித்த பெண்ணையும் மீட்டுள்ளனர்.

இதன்போது கடத்தலுக்கு பயன்படுத்த வாகனம் பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன், நான்கு
இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மணியந்தோட்டம், இருபாலை, சுன்னாகம் ஆகிய
பகுதிகளைச் சேர்ந்த நான்கு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நான்கு பேரையும் நீதிமன்றில் முற்படுத்த
பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version