மன்னார் மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளை அமைக்கின்ற போது ஜனநாயக தமிழ்த்
தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு தேர்தலில் வெற்றி பெற்றுள்ள
உறுப்பினர்களாகிய நாங்கள் உறுதுணையாக இருப்போம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி
சார்பாக மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள்
தெரிவித்துள்ளனர்.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பாக மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு
வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்றையதினம் (27.05.2025)
மதியம் மன்னாரில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில்
கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலை தொடர்ந்து அக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர் டானியல்
வசந்தன், ” உள்ளூராட்சி சபைகளை யாருடன் இணைந்து ஆட்சி அமைப்பது, யாருக்கு ஆதரவு வழங்குவது
தொடர்பாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் மன்னார் மாவட்ட உள்ளூராட்சி
மன்றங்களுக்கு தெரிவான அனைத்து உறுப்பினர்களும் இணைந்து கலந்துரையாடல்களை
மேற்கொண்டோம்.
தேர்தல் வாக்குறுதிகள்
அந்த வகையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றதோ, அந்த முடிவுக்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவை வழங்குவதாக
தீர்மானித்துள்ளோம். தேர்தல் காலங்களில் மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கி
இருந்தோம்.
தமிழ் தேசிய கட்சிகளுடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளை ஆட்சி
அமைப்போம் என்று.
இன்றும் தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து உறுப்பினர்களும் அவ்வாறான ஒரு
நிலைப்பாட்டில் இருக்கின்றோம். அந்த நிலைப்பாட்டில் இருந்து நாங்கள் ஒருபோதும்
மாறிச் செல்லவில்லை. மாறி போகவும் மாட்டோம்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைமை சரியான முடிவை இத்தருனத்தில் எடுக்கும்
என நாங்கள் நினைக்கிறோம்.
அனைத்து தமிழ் மாவட்டங்களிலும் தமிழ் தேசிய பரப்பில்
இருக்கின்ற கட்சிகள் ஆட்சியை அமைக்க வேண்டும். அதற்கு ஜனநாயக தமிழ் தேசிய
கூட்டணி உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு. மன்னார்
மாவட்டத்தில் அனைத்து சபைகளில் இருந்தும் 13 உறுப்பினர்களை பெற்றுள்ளோம்.
தமிழ் தேசிய பரப்பில் மன்னார் மாவட்டத்தில் 2ஆவது பெரிய கட்சியாக நாங்கள்
இருக்கிறோம்.
ஆட்சி அமைக்கின்ற போது சரியான பங்கு எமக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எமது
உறுப்பினர்களின் கோரிக்கையாக உள்ளது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு வாக்குகளை
வழங்கிய அனைத்து மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
உள்ளூராட்சி சபைகள்
தமிழ் தேசிய கட்சிகளுடன் இணைந்து நாங்கள் ஆட்சியை அமைப்போம். சரியான ஊழலற்ற
நிர்வாகத்தை அமைந்து செயல்படுவோம். கடந்த காலங்களில் உள்ளூராட்சிமன்றங்களில்
இடம்பெற்ற ஊழல்களை நாங்கள் வெளியில் கொண்டு வருவோம்.
மேலும் தேர்தல் காலங்களில் நாங்கள் மக்களுக்கு தெரிவித்தோம்.
மத்திய
அரசாங்கத்தை ஆதரிக்காதீர்கள். அவர்கள் தீமையான மக்களை பாதிக்கும் திட்டங்களை
எமது மண்ணில் கொண்டு வருவார்கள் என்று நாங்கள் பல முறை எடுத்துக் கூறினோம்.
அதனையும் மீறி சில மக்கள் தமது அறியாமையினால் அவர்களுக்கு வாக்களித்தனர். அதன்
விளைவாக இன்று இந்த அரசாங்கம் வளங்களை கொள்ளை அடிக்கும் செயற்பாடுகளை
முன்னெடுத்துள்ளது.
நாங்கள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தும் அதை பொருட்படுத்தவில்லை. அதன் பலனை
இன்று அனைவரும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம்.
தமிழ் தேசிய கட்சிகள் இணைந்து மன்னார் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளை
கைப்பற்றும் பட்சத்தில் மாவட்டத்தில் இடம்பெற உள்ள தீய திட்டங்களை எம்மால்
தடுத்து நிறுத்த முடியும்.
எனவே சுய தேவைகளுக்காக மற்ற கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் எண்ணத்தை
கைவிட்டு, மக்களின் நலன் கருதியும் மாவட்டத்தின் நலன் கருதியும் தமிழ் தேசிய
கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும்.
நாங்களும் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்றோம். தலைமை எடுக்கும் முடிவுக்கு
நாங்கள் உறுதுணையாக நிற்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.
