பருத்தி துறையில் லஞ்ச்
சீற் பாவனை முற்றாக தடைசெய்யப்படவுள்ளதாக பருத்தித்துறை
நகரசபை அறிவித்துள்ளது.
இதனடிப்படையில், வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இந்நடவடிக்கை நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகரசபை
பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஷ் இதனை தெரிவித்துள்ளார்.
உணவகங்கள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2026 ஆம் ஆண்டு முதல் உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிலையங்களில் உள்ளக
பயன்பாடு மற்றும் உணவு பொதியிடல் உள்ளிட்ட எந்த செயற்பாடுகளின் போதும் லஞ்ச்
சீற் பயன்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு செயற்படுபவர்கள் மீது நீதிமன்றத்தின்
ஊடாக நேரடியாக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதுடன் அதனை மீறி செயற்படும் வியாபார
நிலையங்களின் வியாபார உரிமம் நகரபிதாவுக்கு உள்ள அதிகாரத்தின் கீழ்
இடைநிறுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
லஞ்ச் சீற் பாவனைக்கு மாற்றீடாக உள்ளக பயன்பாட்டில் வாழை இலை, தாமரை இலை மற்றும் தேக்கம் இலை போன்றவற்றையும் உணவு பொதியிடலின் போது ஈய பேப்பர் மற்றும் உணவு
பொதியிடலுக்காக அனுமதிக்கப்பட்ட கொள்கலன்களை பயன்படுத்துமாறு ஆலோசனை
வழங்கப்பட்டுள்ளது.
இறைச்சி விற்பனை
அத்தோடு, பருத்தித்துறை நகர சபை எல்லைக்குட்பட்ட உணவகங்களின் பயன்பாட்டிற்கு
கொள்வனவு செய்யப்படும் இறைச்சி வகைகளை நகரசபைக்கு உட்பட்ட இறைச்சி கடைகளில்
இருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது கலால் செய்யப்பட்ட இறைச்சிகளை நகரசபைக்கு வெளியே இருந்துதான்
பெற்றுக்கொள்ள கூடியதாக இருப்பதாக முஸ்லிம் உணவக தரப்பினரால்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அவ்வாறான சந்தர்ப்பங்களில் அந்தந்த உள்ளுராட்சி
மன்றங்களினால் அங்கீகரிக்கப்பட்ட இறைச்சி விற்பனை நிலையங்கள் அல்லது இறைச்சி
கூடங்களில் இருந்து கொள்வனவு செய்ய வேண்டும் எனவும் அதற்கான பற்றுச்சீட்டை
அவசியம் வைத்திருக்க வேண்டும் எவும் நகரசபை பொதுச்சுகாதார பரிசோதகரினால்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி முதல் பருத்தித்துறை நகரசபைக்குட்பட்ட
உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிலையங்களில் உள்ளக பயன்பாட்டில் லஞ்ச் சீற்
பாவனை தடை செய்யப்பட்டுள்ளதுடன் ஜனவரி முதலாம் திகதி முதல் முற்றுமுழுதான லஞ்ச் சீற்
பாவனையை தடைசெய்யும் வகையில் மூன்று மாத கால அவகாசம் பருத்தித்துறை நகர
சபையினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
