Home இலங்கை அரசியல் அதி சொகுசு வாகனங்களை அத்தியாவசிய சேவைகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

அதி சொகுசு வாகனங்களை அத்தியாவசிய சேவைகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

0

அரசாங்கத்தின் வசம் உள்ள சொகுசு வாகனங்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

காலிமுகத்திடல் வளாகம் உட்பட பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கும் வகையில் அந்த இடத்தில் (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் ஆனந்த விஜேபால மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் பணிப்புரை 

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“கடந்த ஆட்சிக் காலத்தில் பொதுமக்களின் பணம் வீண் விரயம் செய்யப்பட்ட விதத்தை இந்த இடத்தில் கண்டுகொள்ளக் கூடியதாக உள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் உள்ள வாகன தரிப்பிடத்தில் அந்த வாகனங்களை நிறுத்த இடவசதி போதுமானதாக இல்லை.

காலிமுகத்திடல் வளாகம் உட்பட பல இடங்களில் 107 வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இவை கடந்த அரசாங்கத்தினால் பல்வேறு பதவிகளில் இருந்த தமது நண்பர்களுக்கு வழங்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நாட்டு மக்கள் அன்றாடம் வாழ முடியாத நிலையில் கடந்த 76 வருடங்களாக ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தொடர்ச்சியாக பொதுமக்களின் செல்வங்களை வீணடித்து வருவது மிகவும் வேதனையான நிலையாகும்.

சுகாதாரத்துறையில் போதிய ஆம்பியூலன்ஸ்கள் இல்லாத நிலையிலும், அரச உத்தியோகத்தர்களின் கடமைகளை நிறைவேற்ற போதிய வாகனங்கள் இல்லாதபோதும் பலகோடி ரூபா பெறுமதியான வாகனங்களை தருவித்து முன்னைய ஆட்சியாளர்கள் தமது நண்பர்களுக்கு வழங்கியுள்ளனர்.

பொதுமக்களின் சொத்துக்களைப் பாதுகாக்கவேண்டும்இ முறைகேடாக பயன்படுத்தப்படும் வாகனங்கள் குறித்து முழுமையான ஆய்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த வாகனங்களை செயற்திறனாக மற்றும் அத்தியாவசியமான சேவைகளுக்கு வழங்க ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

பல்வேறு நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட 59 வாகனங்கள் ஜனாதிபதி அலுவலகத்தின் ஊடாக முன்னைய ஆட்சியாளர்களின் நண்பர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதிலும் வாகன இறக்குமதி தடை செய்யப்பட்ட காலப்பகுதியில் மாத்திரம் 16 வாகனங்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் உள்ள 833 வாகனங்களில் 29 வாகனங்கள் காணாமல் போயுள்ளன. இது தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

இவ்வாறு மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவது வருத்தமளிக்கின்றது. இது தொடர்பில் முழுமையான மீளாய்வு நடத்தி எதிர்கால நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

 வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றுடன் தொடர்புடையோருக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும்” என்றும் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version