ஐஸ் போதைப்பொருள் ரசாயனம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பியல் மனம்பேரியின் சகோதரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று பதிவு செய்துள்ளார்.
மித்தெனிய, தலாவ பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் சுமார் 50,000 கிலோகிராம் ரசாயனங்களை புதைத்த சம்பவம் தொடர்பாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பியல் மனம்பேரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், குறித்த கைது நடவடிக்கை தொடர்பில் முறைப்பாடளித்துள்ள அவரின் சகோதரி, தனது சகோதரனைக் கைது செய்வதில் காவல்துறையினரும் சிறப்புப் படையினரும் (STF) தன்னிச்சையாகச் செயல்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆபாச வார்த்தை பிரயோகம்
அத்தோடு, இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தனது சகோதரனை கைது செய்யும் போது, அதிகாரிகள் தனதுகுடும்ப உறுப்பினர்களை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி அவர்களுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.
அதன்காரணமாக தனது பிள்ளைகளின் மனநலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மனநலம் பாதிக்கப்பட்ட தனது பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லக்கூட மறுத்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
