Home இலங்கை சமூகம் அழிவு நிலைக்கு தள்ளப்படும் மன்னார் தீவு! மாக்கஸ் அடிகளார் விடுத்துள்ள கோரிக்கை

அழிவு நிலைக்கு தள்ளப்படும் மன்னார் தீவு! மாக்கஸ் அடிகளார் விடுத்துள்ள கோரிக்கை

0

மன்னார் தீவு வேகமாக அழிவு நிலைக்கு தள்ளப்பட்டு கொண்டு வருகிறது.இதற்கு மக்கள் ஒருபோதும்
ஒத்துழைப்பு வழங்க கூடாது என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை
எஸ். மாக்கஸ்அடிகளார் தெரிவித்துள்ளார்.

மன்னார் பிரஜைகள் குழுவில் இன்று (21) காலை இடம்பெற்ற ஊடக
சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களின் எவ்வித அனுமதியும் இன்றி கனிய மணல் அகழ்வு நடவடிக்கை மற்றும்
காற்றாலை மின் உற்பத்தி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை
அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

கனிய மணல் அகழ்வு

குறித்த நடவடிக்கைகளுக்காக மக்களினுடைய காணிகள் சட்டவிரோதமாக
அபகரிக்கப்படுவதனையும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில்
செயல்படுவதையும் காணக்கூடியதாக உள்ளது.

இதனால் மக்களினுடைய வாழ்வாதாரமும்,எதிர்காலமும் பாதிக்கப்படும் என
சூழலியலாளர்கள் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் மக்களின் எதிர்கால பிரச்சினைகளை உள்வாங்காமல், அரச திணைக்களங்களின்
ஆதரவுடன் பல நிறுவனங்கள் மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

மக்களை அழிவிலிருந்து காப்பாற்றாது, இலாபத்தை மாத்திரம் கருத்தில் கொண்டு
செயல்படும் பல்தேசிய நிறுவனங்கள் மக்களின் வாழ்விடங்களுக்கு பாதிப்பை
ஏற்படுத்துகின்ற வகையில் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு வருகின்ற எந்த நிறுவனங்களுக்கும் மக்கள் எவ்வித உதவிகளையும் வழங்க
வேண்டாம்.இரண்டு கனிய மணல் அகழ்வு  நிறுவனங்களும்,மூன்று காற்றாலை மின்
உற்பத்தி நிறுவனங்களும், மன்னார் மக்களுக்கு எதிராக மிக வேகமாக நடவடிக்கைகளை
முன்னெடுத்து வருகின்றனர்.

கோரிக்கை

குறித்த நிறுவனங்கள் பலரை பணம் கொடுத்து வாங்கும் நிலையையும் ஏற்படுத்தி
உள்ளனர்.ஏழ்மை நிலையில் உள்ள மக்களையும் ஏமாற்றி மக்களின் வாழ்வாதாரத்திற்கு
தாம் கை கொடுப்பதாக கூறி மக்களை இத் திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும்
வகையிலும் அவர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளது.

மேலும் மக்களின் காணிகளை அதிக பணம் கொடுத்து வாங்கி காணியை தமக்கு
சொந்தமாக்கிக் கொண்டு வாழ்விடங்களை பறிக்கும் ஒரு நிலையையும் ஏற்படுத்தி
வருகின்றனர்.

எனவே மன்னார் மாவட்ட மக்கள் அனைவரும் ஒன்றினைந்து இதற்கு எதிராக போராட முன் வர
வேண்டும்.மக்கள் குறித்த திட்டங்களுக்கு ஒரு போதும் அனுமதியை வழங்கக் கூடாது
என கேட்டுக் கொள்ளுகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version