Home இலங்கை சமூகம் ஜனாதிபதிக்கு மன்னார் மக்கள் அனுப்பியுள்ள ஆயிரக்கணக்கான தபாலட்டைகள்

ஜனாதிபதிக்கு மன்னார் மக்கள் அனுப்பியுள்ள ஆயிரக்கணக்கான தபாலட்டைகள்

0

மன்னார் தீவில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின்சாரம் அமைத்தல் மற்றும்
கனிய மணல் அகழ்வு செயற்பாடுகளை நிறுத்த கோரி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஆயிரக்கணக்கான தபால் அட்டை மூலம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

குறித்த தபாலட்டைகள் நேற்றைய தினம் (01) மாலை மன்னார் தபாலகத்தில் அஞ்சல் செய்யப்பட்டுள்ளன. 

மன்னார் தீவில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின்சாரம் அமைத்தல்
மற்றும் கனிய மணல் அகழ்வு செயற்பாடுகளை நிறுத்த கோரி ஜனாதிபதி மற்றும்
பிரதமருக்கு அழுத்தத்தை கொடுக்கும் வகையில் தபால் அட்டை மூலம் கோரிக்கைகள்
முன்வைக்கும் நடவடிக்கை கடந்த வெள்ளிக்கிழமை மன்னாரில்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விசேட திட்டங்கள் 

இந்த நடவடிக்கை மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர்
ஜாட்சன்பிகிராடோ தலைமையில் மன்னார் பேருந்து தரிப்பிடத்தில்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதனைத்தொடர்ந்து, மன்னார் தீவு பகுதியில் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக
மக்களிடம் தபாலட்டைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தில் கடந்த பல வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை
மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெற்று
வருகின்ற நிலையில் மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில், மன்னார் தீவில் குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாம் என்ற கோரிக்கையை
முன்வைத்து மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தனர்.

கடந்த காலங்களில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டவர்களிடமும் கோரிக்கைகளை முன்வைத்த போதும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.

உரிய நடவடிக்கை 

இவ்வாறிருக்கையில், தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு குறித்த
திட்டத்தின் பாதகத்தையும் இத் திட்டம் மக்களுக்கு எதிரானது என்பதை
வலியுறுத்தும் வகையிலும் கொழும்பில் உள்ள அலுவலகங்களுக்கு மக்களின் கோரிக்கை
அடங்கிய தபால் அட்டைகள் இவ்வாறு அனுப்பி வைக்கப்படுகின்றன. 

புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தனது தேர்தல் பிரசாரங்களின் போது தான் ஜனாதிபதியாக வந்தால் மன்னார் தீவில்
அமைக்கப்படும் காற்றாலை மின்சார திட்டத்திற்கான ஒப்பந்தத்தை இரத்து செய்வதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், இதனை வலியுறுத்தும் வகையிலும் இந்த தபாலட்டைகள் அனுப்பி
வைக்கப்படுகின்றன. 

மேலும், மக்களிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கை அடங்கிய ஆயிரக்கணக்கான தபாலட்டைகள் நேற்று மாலை மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான
நிறுவனத்தினால் சேகரிக்கப்பட்ட நிலையில் மன்னார்
தபாலகம் ஊடாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

NO COMMENTS

Exit mobile version