உள்நாட்டு பொறிமுறையில் இருக்கின்ற அத்தனையும் பூட்டப்பட்ட கதவுகளாக இருப்பதனால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
உறவுகள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு (Batticaloa) ஊடக அமையத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, நாளைய தினம் திருகோணமலையில் நடைபெறவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட
உறவுகளுக்கான போராட்டத்தில் அனைவரையும் ஒன்றிணையுமாறும் அவர் கோரிக்கை
விடுத்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“நாளை 30ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினம். அந்தவகையில் வடக்கு கிழக்கில் உள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தாம் இழந்த உறவுகளை பற்றி தங்களுடைய மன கொதிப்பை, ஆதங்கங்களை
வெளிப்படுத்துகின்ற ஒரு விதமாக இது அமைந்திருக்கின்றது.
அகிம்சை ரீதியான போராட்டம்
அந்தவகையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மாத்திரம் அல்லாமல் அந்த வலிகளை
தாங்கிக் கொண்டு இருக்கின்ற உறவுகளின் சார்பாக அவர்கள் தங்களுடைய மன ஆதங்கத்தை
போராட்டமாக அதாவது அகிம்சை ரீதியான போராட்டமாக முன்னெடுத்து இருக்கின்றார்கள்.
எனவே, திருகோணமலையிலும் யாழ்ப்பாணத்திலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட
உறவுகள் தங்களது 15 ஆண்டுகளாக நீதி வழங்கப்படவில்லை என்பதனை
வெளிக்காட்டக்கூடிய விதத்தில் அந்த ஆர்ப்பாட்டத்தை ரீதியாக செய்வதற்கு
ஏற்பாடு செய்திருக்கின்றார்கள்.
எமது கிழக்கில் நடைபெறுகின்ற அந்த போராட்டம் என்பது திருகோணமலை சிவன் கோயில்
முன்பாக நடைபெற இருக்கின்றது என்பதனை எமது உறவுகள் நாங்கள் மனதில் நிறுத்திக்
கொள்ள வேண்டும்.
15
ஆண்டுகளாக தெருக்களில் நின்று நாங்கள் புலம்பி கொண்டிருக்கின்றோம் கண்ணீரும்
கம்பலையுமாக எமது உறவுகள் தெருவில் நின்று கொண்டிருக்கின்றன இதற்கு இன்னமும்
நீதி கிடைக்கவில்லை.
உள்நாட்டு பொறிமுறை ஊடாக இலங்கை தமிழ் மக்களில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளாக
இருந்தால் என்ன சாதாரணமாக வாழ்கின்ற மக்களாக இருந்தால் என்ன அவர்களுக்கு
நீதியான தீர்வு என்பது கிடைக்காமல் இருக்கின்றது.
உரிய தீர்வு
எனவே, சர்வதேச பொறிமுறையின் ஊடாக நீதியை கோருகின்ற ஒரு போராட்டமாக இது
அமைந்திருக்கின்றது. உள்நாட்டு பொறிமுறையில் இருக்கின்ற அத்தனையும் பூட்டப்பட்ட
கதவுகளாக இருக்கின்றன.
அதனூடாக நியாயமான நீதியான மனித உரிமையை பாதுகாக்கின்ற
ஒரு தீர்வு கிடைக்க முடியாத நிலை இருக்கின்றதனால் இந்த மக்கள் தொடர்ந்து
போராடுகின்றார்கள்.
உறவுகளை தேடி போராடுகின்றவர்கள் தங்கள் உயிரையும் மாய்த்துக்
கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தாய்நாட்டில் அந்த உள்நாட்டு
மக்களை வதைப்பது, கொல்வது, காணாமல் ஆக்குவது என்பது ஒரு மனித பேரவழத்தின்
உச்சமான நிலைப்பாடாக கருதப்படுகின்றது.
மட்டக்களப்பில் அமலநாயகியும் அம்பாறையில் செல்வராணியும் திருகோணமலையில் செபஸ்டியன்தேவியும் போராட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
ஆகவே அவர்கள் உறவுகளை இழந்த அவலத்தோடு மாத்திரம் அல்லாமல் மற்றவர்களது உறவுகளை
இழந்த அவலத்தை வெளிக்காட்ட வேண்டும் என்பதற்காக பல்வேறுபட்ட இடர்பாடுகளுக்கு
மத்தியில் பல்வேறுபட்ட தடங்கல்களுக்கு மத்தியில் இவற்றை செய்து
கொண்டிருக்கின்றார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
Source: https://tamilwin.com/article/member-of-parliament-mr-sirinesan-speech-1724924671
