Home இலங்கை சமூகம் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்…சர்வதேச நீதிப்பொறிமுறை வேண்டும் : ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு கடிதம்

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்…சர்வதேச நீதிப்பொறிமுறை வேண்டும் : ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு கடிதம்

0

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இலங்கையை (Sri Lanka) சர்வதேச நீதிப்பொறிமுறைக்கு உட்படுத்த வேண்டும் என கோரி ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நாயகத்திற்கு(OHCHR) கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று (30) வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாக, ”பாதிக்கப்பட்டவர்களாகிய நாம் உள்நாட்டுப் பொறிமுறையை அடியோடு நிராகரித்திருக்கும் நிலையில் எமது விருப்பின்றி, உடன்பாடின்றி உள்நாட்டுப் பொறிமுறையைக் கொண்டு வந்து வீண் கால விரயத்தையும் பொருள் விரயத்தையும் செய்ய வேண்டாம்.

சர்வதேச நீதிப் பொறிமுறை

கடந்த 2022 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 46/1 தீர்மானத்தின் பிரிவு 8 இன்படி ஐ.நாவால் ஆவணம் திரட்டுவதற்காக உருவாக்கப்பட்ட  அமைப்பானது போதியளவு ஆவணங்களைத் திரட்டியுள்ளது.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள எமது உறவுகளில் அநேகமானோர் தமது சாட்சியங்களை விரும்பி பதிவு செய்ததுடன் தமது அறிக்கையையும் (SLAP) சமர்ப்பித்துள்ளனர். அந்த அறிக்கையிலும் சர்வதேச நீதிப் பொறிமுறையையே பரிந்துரை செய்துள்ளனர்.

அத்துடன் ஐ.நாவால் அறிக்கை இடப்பட்ட ருஷ்மான் அறிக்கை உள்ளிட்ட பல்வேறு அறிக்கைகளும் போதியளவு ஆதாரங்களை முன்வந்துள்ளன. ஆகவே திரட்டப்பட்ட ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டே இலங்கையை சர்வதேச நீதிப்பொறிமுறைக்குள் உட்படுத்த முடியும்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்

அத்துடன் முன்னாள் ஐ.நா ஆணையாளர் மிசேல் பசேலெட் (Ms. Michelle Bachelet) அறிக்கையில் சிறிலங்கா விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) பரப்படுத்தும் பரிந்துரையை வழங்கி இருந்த நிலையில் ஐ.நாவின் 26 முன்னாள் ஆணையாளர்களும் வழிமொழிந்திருந்தனர்.

எனவே மீண்டும் கால விரயங்களைச் செய்யாது சிறிலங்காவை பொறுப்புக் கூறவைக்கும் வகையில் பொருத்தமான சர்வதேச நீதிப் பொறிமுறையை (ICC ) பிரயோகித்து எங்களுக்கான நீதியை நாம் உயிருடன் இருக்கும் போதே பெற்றுத் தாருங்கள்.

எமது உயிரிலும் மேலான உறவுகளை பறிகொடுத்துவிட்டு வயதான காலத்திலும் நீதி கேட்டு போராடும் நாம், சர்வதேச நீதி பொறிமுறை தவிர்ந்த எந்த சமரசத்தையும் ஏற்றுகொள்ள மாட்டோம் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். “ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: https://ibctamil.com/article/missing-persons-relations-letter-to-the-un-ohchr-1725005665

NO COMMENTS

Exit mobile version