Home இலங்கை சமூகம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்…. உண்மையைக் கண்டறியுமாறு செஞ்சிலுவைச் சங்கம் வலியுறுத்தல்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்…. உண்மையைக் கண்டறியுமாறு செஞ்சிலுவைச் சங்கம் வலியுறுத்தல்

0

உலகளாவிய ரீதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவா்களுக்கு என்ன நேர்ந்தது எனும் உண்மையைக் கண்டறிவதற்குரிய சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) தெரிவித்துள்ளது.

இலங்கையில் (Sri Lanka) சகல சமூகங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் காணாமல்போன தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதற்காக நீண்டகாலமாகக் காத்திருக்கின்றார்கள் என அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இன்றைய தினம் (ஓகஸ்ட் 30) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அதனை முன்னிட்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

2 இலட்சத்திற்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது “உலகளாவிய ரீதியில் யுத்தம், வன்முறைகள், அனர்த்தங்கள், மனிதாபிமான நெருக்கடிகள் மற்றும் புலம்பெயர்வு போன்ற பல்வேறு காரணிகளால் தமது குடும்பத்தினரை, அன்புக்குரியவர்களை பிரிந்த சகலரையும் நாம் இன்றைய தினத்தில் நினைவுகூருகின்றோம்.

2023 ஆம் ஆண்டின் இறுதியில் உலகளாவிய ரீதியில் 2 இலட்சத்து 39 ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோர் காணாமல்போயிருப்பதாக செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச்சங்கக் கூட்டிணைவில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றார்கள்.

இருப்பினும் இந்த எண்ணிக்கை காணாமல் ஆக்கப்படல்களின் உண்மை நிலவரத்தையும், தீவிரத்தன்மையையும் துல்லியமாகப் புலப்படுத்தவில்லை.

உண்மையைக் கண்டறிதல் 

இலங்கையில் சகல சமூகங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் காணாமல்போன தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதற்காக நீண்டகாலமாகக் காத்திருக்கின்றார்கள்.

அவர்கள் கௌரவத்துடன் வாழ்வதற்கு இடமளிக்கும் அதேவேளை, அவர்களது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது எனும் உண்மையைக் கண்டறிவதற்குரிய சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படவேண்டும்“ என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version