வடக்கின் அபிவிருத்தி சார்ந்து தம்மால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை தற்போதைய அரசாங்கம் மிகவும் சாதகமாகவே பரிசீலித்து வருகின்றதாக வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தி, விளையாட்டுத் துறைக்குத் தேவையான
வளங்களைப் பெற்று, எமது வீரர்கள் சர்வதேச அரங்கில் மிளிர வேண்டும் என வும் அவர் கூறியுள்ளார்.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்
நிர்மாணிக்கப்படவுள்ள யாழ். மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல்
நடும் விழா நேற்று (23.11.2025) யாழ்ப்பாணம் பழைய பூங்கா
வளாகத்தில் நடைபெற்றது.
இதில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
வடக்கு ஆளுநர்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரே வட மாகாணத்துக்கு அதிகளவான நிதி
ஒதுக்கப்பட்டு, பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.
நான் யாழ். மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலத்திலிருந்தே, இந்த
மாவட்டத்துக்கு ஒரு உள்ளக விளையாட்டு அரங்கு அமைய வேண்டும் எனப் பெரிதும்
விரும்பினேன்.
அதற்காகப் பல தடவைகள் முயற்சிகளை மேற்கொண்ட போதும்,
அக்காலப்பகுதியில் அது கைகூடியிருக்கவில்லை. ஆனால், எனது அந்த நீண்டகாலக் கனவை
இந்த அரசாங்கம் இன்று நிறைவேற்றியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் பிமல்
இதன்போது அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுகையில், யாழ்.
மாவட்டத்துக்கான இவ்வருட நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டுத் துறையின்
மேம்பாட்டிற்காகவே அதிகளவாக 170 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று
அடிக்கல் நடுகை செய்யப்படும் இந்த உள்ளக விளையாட்டு அரங்கின் பணிகள்
துரிதப்படுத்தப்பட்டு, 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி விளையாட்டு
வீரர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படும் என உறுதியளித்தார்.
