Home இலங்கை சமூகம் நுவரெலியாவில் தேர் போன்று அலங்கரித்து வரும் பேருந்துகளால் ஆபத்து

நுவரெலியாவில் தேர் போன்று அலங்கரித்து வரும் பேருந்துகளால் ஆபத்து

0

சுற்றுலா நிமிர்த்தம் நுவரெலியா வரும் பேருந்துக்கள்
போக்குவரத்து விதிமீறல்களால் ஏற்படும் அதிக ஒலி, ஒளி காரணமாக ஏற்படும்
பாதிப்புகளைக் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பு
எழுந்துள்ளது.

குறிப்பாக இரவு நேரங்களில் நுவரெலியா கிரகரி வாவிக் கரையோரம் உள்ளிட்ட சில
சுற்றுலா பிரசித்திப்பெற்ற இடங்களில் சுற்றுலா பயணிகள் வருகைத்தரும் பேருந்துக்கள் தற்கால சூழ்நிலைக்கேற்ப நவீன வடிவமைப்பில் தயாரிக்கப்பட்டு
விபத்துகள் ஏற்படக்கூடிய வகையில் பொருத்தப்பட்டுள்ள அபாயகரமான மேலதிக
உதிரிபாகங்களைக் கொண்டு பலநிறங்களில் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு வருகிறது.

அத்துடன் அதிரும் அதிகச் சத்தமாக பாடல்களை ஒலிபரப்பபட்டு தங்களுடைய பொழுதுகளை
கழிக்கின்றனர், இதில் அதிக ஓசையை எழுப்பக்கூடிய ஒலி எழுப்பிகளை ( ஹோர்ன்கள்
Horn) பயன்படுத்தி வருகின்றனர். இது குறித்து பொலிஸாரோ அல்லது போக்குவரத்து
விதிமீறல்களை கண்காணிக்கும் அதிகாரிகளோ கண்டுகொள்வதில்லை என பொது மக்கள்
குற்றம் சுமத்தப்படுகிறது.

இடையூறு 

இது குறித்து பொது மக்கள் கூறுகையில், நுவரெலியாவிற்கு வரும் பேருந்துக்களில் அதிக வெளிச்சத்தை உமிழும் திறன்வாய்ந்த பரவலாக ஒளி பரப்பும் நவீன (எல்.இ.டி) மின்குமிழ்கள்
பொருத்தப்பட்டுள்ளன. 

நுவரெலியா நகரின் மையப் பகுதிகளிலும் அதிக
எண்ணிக்கையிலான விளக்குகளுடன் ஒளியை பரப்பிச் செல்லும் இவ்வாறான
பேருந்துக்களால் எதிரே வரும் வாகன சாரதிகளின் கண்களுக்கு கூச்சத்தை
ஏற்படுத்துகின்றன, இதேபோல் பயன்படுத்தப்படும் அதிக ஓசையை எழுப்பக்கூடிய ஒலி
எழுப்பிகள் ( ஹோர்ன்கள் Horn) மிருகங்களைப் போல் ஒலி எழுப்புவதாகவும்
இருக்கின்றன.

பிரதான வீதிகளில் திடீரென ஒலிக்கப்படும் இந்த வகை ஒலி
எழுப்பிகள் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை
ஏற்படுத்துகின்றன, இவ்வாறான செயற்பாடு காரணமாக ஏனைய வாகன சாரதிகள்
மட்டுமின்றி, பாதசாரிகளுக்கும் உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

முதலில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்துவதால் பொதுமக்கள் ஏற்படும்
இடையூறு குறித்து பேருந்து சாரதிகளுக்கும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்த
நடவடிக்கை வேண்டும்,

மேலும் நுவரெலியாவிற்கு வருகைத்தரும் பேருந்துக்களால் அதிக ஒலியானது நம்மை
அறியாமலே நம் அரோக்கியத்தை பாதிக்கிறது அதேபோல் மற்ற உயிரினங்களுக்கும் தீவிர
பாதிப்பை உண்டாக்குகிறது.

மேலும் இவ்வாறான அதிக ஒலி செவிகளில் துன்புறுத்தக்
கூடிய இரைச்சலாக மாறுகிறது இது காதுகளில் ஏற்படும் நோய்களுக்கு அதிக வலியை
உண்டாக்கும் அனுபவத்தை அதிகரிக்கிறது.

தற்போது திரையரங்குகளை விஞ்சும் வகையில் நவீன சவுண்ட் சிஸ்டம், ஊபர்
ஸ்பீக்கர்கள் மூலம் பாடல்களை ஒலிபரப்பபட்டு தங்களுடைய பொழுதுகளை கழிக்கின்றனர்.

அதிக ஒளி – ஒலி 

இதில் இவர்கள் நல்லிரவு வரை ஒரே இடத்தில் பேருந்துக்களை நிறுத்தி தங்களுடைய
தேவைகளை பூர்த்தி செய்கின்றன, இதனால் நாங்கள் நகர் மத்தியில் வாழ்வதற்கு
ஏற்றதாக இல்லை வீடுகளில் இரவில் கண்ணயர முயற்சிப்பவர்கள் திடீரென அதிரும்
சத்தத்தால் அதிர்ச்சியடைகின்றனர். பெரியவர்களின் நிலை இப்படி என்றால்
குழந்தைகளின் நிலையை விவரிக்க முடியாது உள்ளது. பேருந்தில் எழும் அதிக
சத்தத்தால் வீறிட்டு அழும் கைக் குழந்தைகளைச் சமாதானப்படுத்த முடியாமல்
பெற்றோர் தவிக்கும் நிலை எனத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

குறிப்பாக ஒருவர் கேட்கும் சத்தம் எப்போது அவர்களின் செவிகளில் துன்புறுத்தக்
கூடிய இரைச்சலாக மாறுகிறதோ அப்போது அதை ஒலி மாசு என்று வைத்தியர்கள் மற்றும்
ஆய்வாளர்கள் கூறுகின்றன. இதனையே நாங்கள் தினமும் அனுபவித்து வருகிறோம் ,
இவ்வாறு அதிக சத்தங்களை கேட்கும்போது முதலில் எங்களுக்கு செவி பாதிப்பு
பிரச்சினைகளை சந்திக்கின்றோம், மேலும், ஒலி மாசினால் உயர் ரத்த அழுத்தம்,
தலைவலி, உளவியல் பிரச்சனைகளான மன அழுத்தம், கவலை, தூக்கமின்மை, நினைவாற்றல்
குறைதல் போன்ற பாதிப்புகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

இதிலும் கடந்த காலங்களில் பாட்டுகள் மட்டும் ஒலிக்க விடப்பட்ட நிலையிலிருந்து,
அடுத்த வளர்ச்சியாக அதிக தொழில்நுட்பத்தினைக்கொண்ட புதிய Smart
தொலைக்காட்சிகள் மூலம் திரைப்படங்கள் மற்றும் வீடியோ பாடல்கள் ஒளிபரப்ப
தொடங்கியதும் பொது மக்களின் சோதனை பல மடங்காக மாறியுள்ளது இதில் ஆபாசக்
காட்சிகள் மிகுந்த ஒளிபரப்பப்படும் போது, படங்கள், பாடல்களை அருகில் வசிக்கும்
குடும்பதினர் தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

நுவரெலியாவிற்கு வருகை தரும் விசித்திரமான பேருந்துக்களால் ஏற்படும் ஒலி
மாசினால் மனிதர்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை அது ஒட்டுமொத்த இயற்கை
சூழலையும் பாதிக்கிறது இங்குதான் நாம் இதன் தீவிரத்தை உணர வேண்டும். ஒலி மாசு
மனிதர்களைவிட அதிகளவில் பறவைகள், உயிரினங்கள், விலங்குகளுக்குதான் அதிக
பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன இதனால் பேருந்துகளில்
சந்திக்கும் இந்தக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைப்பது யார் எனத் தெரியாமல்
நாள்தோறும் வேதனையைச் சந்திக்கும் பொது மக்களுக்கு நல்வழி ஏற்படுத்த வேண்டும்
என்பதே எங்களின் பாரிய எதிர்பார்ப்பாக உள்ளது எனத் தெரிவிக்கின்றனர்.

எனவே பேருந்துக்களில் விபத்துகள் ஏற்படக்கூடிய வகையில் பொருத்தப்பட்டுள்ள
அபாயகரமான மேலதிக உதிரிபாகங்களை அகற்றி முன் மற்றும் பின் பக்கங்களில்
பொருத்தக்கூடிய சமிஞ்சை மின்விளக்குகளுக்கு மேலதிகமாக பொருத்தப்பட்டுள்ள
மின்குமிழ்களை அகற்றவும் அதிகம் சத்தம் கூடிய ஒலி அமைப்புக்களை
குறைத்துக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நுவரெலியாவிற்கு
புதிதாக வருகின்ற பேருந்துக்களால் அவதியை அனுபவிக்கும் பொதுமக்களின்
எதிர்பார்ப்பாகும்.

NO COMMENTS

Exit mobile version