Home இலங்கை அரசியல் போலித் தமிழ்த் தேசியவாதிகளை மக்கள் நிராகரிக்க வேண்டும் : ஐங்கரநேசன் வேண்டுகோள்

போலித் தமிழ்த் தேசியவாதிகளை மக்கள் நிராகரிக்க வேண்டும் : ஐங்கரநேசன் வேண்டுகோள்

0

போலித் தமிழ்த்தேசியவாதிகளையும் போதை வியாபாரிகளையும் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் பொதுச்சபை 

தொடர்ந்து தெரிவிக்கையில், “ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச்சபையும் ஏழு தமிழ்த்தேசியக் கட்சிகளும் இணைந்து தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பாகப் பொது வேட்பாளரை நிறுத்தியிருந்தன. 

இதன் போது இரண்டு தரப்பினருக்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் தமிழ்ப் பொதுவேட்பாளராக நிறுத்தப்படுபவரும் அவருக்கான தேர்தல் சின்னமும் தமிழ்ப் பொது நிலைப்பாட்டுக்கான குறியீடாக மட்டுமே கருதப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இத்தேர்தலில் கட்சிகளைக் கடந்து தமிழினமாகச் சிந்திப்போம் என்ற கோசம் முன்வைக்கப்பட்டது. பொதுவேட்பாளருக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளைக் கொண்ட உறுப்பினர்களும் தொண்டர்களுங்கூட பொதுவேட்பாளரின் சங்குச் சின்னத்துக்குப் பெருமளவில் வாக்களித்திருந்தார்கள். 

தமிழ் மக்கள் பொதுச்சபை நாடாளுமன்றத் தேர்தலில் நேரடியாக ஈடுபடமுடியாது என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதனால் இப்போது தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு என்ற அமைப்பு இல்லை.

ஜனநாயக விரோதப் போக்குகள்

இரண்டு தரப்புகளும் இணைந்து இறுதியாக நிகழ்த்திய கலந்துரையாடலில் தமிழ் மக்கள் பொதுச்சபையும் பங்கேற்று தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பாகப் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளாவிடில் தமிழ்த் தேசியப் பசமை இயக்கம் இந்த அணியில் இடம்பெறாது என்று மிகத் தெளிவாக தெரியப்படுத்தியிருந்தோம். 

தமிழரசுக்கட்சியில் நிலவுகின்ற தமிழர் விரோத, ஜனநாயக விரோதப் போக்குகளால் அக்கட்சியில் இருந்து உண்மையான தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். 

அவர்கள் உருவாக்கியுள்ள ஜனநாயகத் தமிழரசுக் கட்சியுடன் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கமும் இணைந்து ஜனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பு உருவாகியுள்ளது. இக்கூட்டமைப்பு சுயேட்சையாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.சி தவராசா தலைமையில் தேர்தலில் போட்டியிடுகின்றது.

ஏற்கனவே தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் பயன்படுத்திய மாம்பழம் சின்னத்தையே நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் கேட்டு இத்தேர்தலில் எமது சின்னமாகப் பெற்றுக்கொண்டுள்ளோம்.

காலத்தின் கட்டாயமாகப் போட்டியிடுகின்ற எங்களை ஆதரிக்க வேண்டுமென்று தமிழ் மக்களைக் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் ஐங்கரநேசன் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version