Home இலங்கை அரசியல் நாட்டின் நிலைத் தன்மைக்கு விவசாயிகளே மிக முக்கிய காரணம்: ரணில் புகழாரம்!

நாட்டின் நிலைத் தன்மைக்கு விவசாயிகளே மிக முக்கிய காரணம்: ரணில் புகழாரம்!

0

எரிபொருள், உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகளை இல்லாது செய்து நாட்டில் நிலைத் தன்மையை ஏற்படுத்த விவசாயிகளே மிக முக்கிய பங்களிப்பினை வழங்கியுள்ளனர் என ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremeisnghe) தெரிவித்துள்ளார்.

யாப்பகூவவில் (Yapahuwa) நேற்று (04) இடம்பெற்ற இயலும் சிறிலங்கா வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, “நான் பொறுப்பேற்ற வேளையில் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி சரிவடைந்திருந்தது. அமெரிக்கா, உலக வங்கியுடன் பேசி விவசாயிகளுக்கு உரம் பெற்றுக்கொடுத்தேன். விவசாயிகளும் பிரதி உபகாரம் செய்தனர்.

குறைந்த வருமானம்

சுற்றுலாத்துறையை பலப்படுத்தி நாட்டை கட்டியெழுப்பினோம். இன்று போட்டியிட வந்திருக்கும் 38 பேரும் நாடு நெருக்கடியிலிருந்த போது நாட்டை மீட்க வரவில்லை.

விவசாயிகளே அதற்காக பாடுபட்டனர். இலங்கை (Sri Lanka) வங்குரோத்தடைந்தது. எமக்கு கடன் வழங்கிய நாடுகளின் உதவியுடன் இன்று மீண்டு வருகிறோம். மக்களுக்கு கஷ்டம் உள்ளது. அதேபோல் நாட்டை மீட்க மக்கள் சுமைகளை தாங்கிக் கொண்டனர்.

அதற்காக நாட்டு மக்களுக்கும் நன்றி சொல்கிறோம். மக்களுக்கு நன்றிக்கடனாகவே குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு நிவாரணங்களை வழங்குகிறோம். பொருட்களின் விலையை ஓரளவு குறைத்திருக்கிறோம். இன்றும் மக்களுக்கு கஷ்டங்கள் உள்ளன.

எனவே இனிவரும் காலத்தில் நாம் எவ்வாறு முன்னேறிச் செல்லலாம் என்பதை இலக்கு வைத்தே எனது திட்டங்களை முன்வைத்திருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Source: https://ibctamil.com/article/presidential-election-ranil-campaign-udpates-tamil-1725510472

NO COMMENTS

Exit mobile version