Home இலங்கை சமூகம் யாழில் விடுவிக்கப்படாமல் இருக்கும் காணிகளை முறையாக விடுவிக்க நடவடிக்கை

யாழில் விடுவிக்கப்படாமல் இருக்கும் காணிகளை முறையாக விடுவிக்க நடவடிக்கை

0

யாழ்.மாவட்டத்தில் விடுவிக்கப்படாமல் இருக்கும் பொதுமக்களின் காணிகளை
முறையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர
கருணாதிலக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (10) நடைபெற்ற அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் வலிகாமம்
வடக்கில் இதுவரை விடுவிக்கப்படாமல் இருக்கும் பொதுமக்களின் காணிகள் தொடர்பில்
எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் வலிகாமம் வடக்கில் 2010ஆம் ஆண்டில் 12 ஆயிரத்து 376
குடும்பங்களைச் சேர்ந்த 42 ஆயிரத்து 699 பேர் இடம்பெயர்ந்தவர்களாகப் பதிவு
செய்யப்பட்டிருந்தனர்.

மீள்குடியேற்றம்

அவர்களில் 10 ஆயிரத்து 981 குடும்பங்களைச் சேர்ந்த 3
இலச்சத்து 8 ஆயிரத்து 693 பேர் மீள் குடியேற்றப்பட்டிருந்தனர்.

எனினும், ஆயிரத்து 395 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 6 பேர்
மீள்குடியேற்றப்படாமல் இருக்கின்றனர்.

இதேவேளை, 2009 காலத்தில் 23 ஆயிரத்து
850 ஏக்கர் காணி முப்படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தன.

அவற்றில் பெரும்பாலான பகுதி விடுவிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது 2 ஆயிரத்து 583
ஏக்கர் பகுதி விடுவிக்கப்பட வேண்டியுள்ளது.

எவ்வாறாயினும் இடம்பெயர்ந்த அனைவரையும் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்த
வேண்டும் என்ற கொள்கையிலேயே அரசாங்கம் செயற்படுகின்றது.

விடுவிக்க நடவடிக்கை

இதன்படி சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஊடாக அந்தக் காணிகளை மக்களிடம் ஒப்படைக்க
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அதேபோன்று மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் போன்ற தேசிய பொருளாதாரத்துக்கு
முக்கியமான இடங்களை அபிவிருத்தி செய்யும் பணிகளிலும் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

அங்கு மூடப்பட்டிருந்த வீதிகளும் திறக்கப்பட்டுள்ளன.

இந்த அரசாங்கம் வடக்கு மக்களுக்காக வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக பெருமளவு
நிதிகளை ஒதுக்கியுள்ளது. அங்கு பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணிகள்
முன்னெடுக்கப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version