Home இலங்கை அரசியல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் ராஜபக்ச குடும்பத்தினரா..! சந்தேகம் வெளியிட்டுள்ள சாணக்கியன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் ராஜபக்ச குடும்பத்தினரா..! சந்தேகம் வெளியிட்டுள்ள சாணக்கியன்

0

இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டபோது சர்வதேச விசாரணைக்கு தயார் எனக்
கூறியவர் இன்று முந்நூற்றுக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு சர்வதேச
விசாரணையை செய்வதற்கு தயங்குகின்றார் என்றால் இதன் பின்புலத்தில் ராஜபக்ச குடும்பத்தினர் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை
இன்னும் உறுதிப்படுத்துகின்றது என மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட தமிழ் தேசிய
கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இன்று (21) நடைபெற்றுள்ள ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நினைவேந்தலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் பின்புலம்

கொடூரமான ஈஸ்டர் குண்டுவெடிப்புக் (Easter Attack) கொலை நடந்து ஐந்து ஆண்டுகள்
பூர்த்தியாகியிருக்கின்றது. இந்தக் குண்டுத் தாக்குதல் இயல்பாக
நடந்ததா, இதற்குப் பின்னால் ஒரு பின்புலம் இருந்ததா, அரசியல் இலாபம் அடைவதற்காக
செய்யப்பட்டதா எனப் பல சந்தேகங்கள் அந்த நேரத்தில் எழுந்தது.

ஐந்து ஆண்டுகள்
பூர்த்தியாகியுள்ள நிலையில் அந்த சந்தேகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து
சந்தேகத்திற்கிடமில்லாமல் இதுவொரு அரசியல் பின்புலத்துடன் சம்பந்தப்பட்டது
என்பது போல் தென்படுகின்றது.

இந்தக் கொலைக்குப் பின்னாலிருந்த எவரும் இதுவரை
தண்டிக்கப்படவில்லை. ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் இது
விசாரணைக்குரிய காலமல்ல தீர்ப்பு வழங்கவேண்டிய காலமாகும்.

வத்திக்கான்
போப்பாண்டவர் உட்பட மதத்தலைவர்கள் பலராலும் எத்தனையோ அழுத்தங்கள் கொடுத்தும்
இலங்கை அரசாங்கம் மக்கள் நம்பக்கூடிய வகையில் இதுவரை மக்களுக்கு எந்தவொரு
நீதியும் வழங்கவில்லை.

தமிழ் வாக்காளர்கள்

ஈஸ்டர் குண்டுவெடிப்பிற்குப் பின்புலத்தில் இருந்தவர்கள் யாரென்பது கடந்த
வருடம் சனல்-4இல் வெளிவந்த ஆவணப்படம் மூலமாக பல சந்தேகங்கள் இன்றும்
எழுப்பப்பட்டிருக்கின்றது.

தமிழ் மக்கள் அதிகமான வாழ்கின்ற,
தமிழ் வாக்காளர்கள் அதிகம் இருக்கின்ற மட்டக்களப்பிலே ஏன் இந்தக்
குண்டுவெடிப்பு நடந்தது என்றால் ஈஸ்டர் குண்டுவெடிப்புக் காணொளியிலே
மட்டக்களப்பு மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டிருக்கின்ற
சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுடைய ஊடகப்பேச்சாளர் அசாத் மௌலானாவின்
வாக்கு மூலத்திலே சொல்லப்படுகின்ற விடயங்களைப் பார்த்தால் எம்முடைய மக்களுக்கு
உண்மை புரியும்.

குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் அணுஅணுவாக
செத்துக்கொண்டிருக்கின்றார்கள்

ஆகவே எங்களுடைய மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். இந்தக்
கொலைக் கும்பலை இந்த மாவட்டத்திலிருந்து நாங்கள் அகற்ற வேண்டும், இந்தக்
கொலைக் கும்பலை இந்த நாட்டைவிட்டே அகற்ற வேண்டும். நாட்டைவிட்டு
அகற்றவேண்டுமானால் அவர்களை அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டும் என்றும் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version