Home ஏனையவை ஆன்மீகம் முல்லைத்தீவில் இந்து ஆலயங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

முல்லைத்தீவில் இந்து ஆலயங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

0

Courtesy: uky(ஊகி)

முல்லைத்தீவில் உள்ள இந்து ஆலயங்கள் திட்டமிட்டு புறக் கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன.

மத வழிபாட்டுத் தலங்களுக்கு அரசாங்கத்தினால் பரிந்துரைக்கப்பட்டு வழங்கப்பட்டு வரும் சூரிய படல் மின் இணைப்புக்களைப் பெற்றுக் கொள்ளவதிலேயே இந்த அநீதி இழைக்கப்படுகிறது.

முல்லைத்தீவில் உள்ள ஏனைய மத வழிபாட்டுத் தலங்களுக்கு அவ் இணைப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதை அனுமதிப்பதற்கான போதிய தகவல்கள் உள்ளடக்கப்பட்ட போதும், இந்து ஆலயங்களிற்கு அவ்வாறில்லை என உள்ளகத் தகவல்கள் முலம் அறிய முடிகின்றது.

சூரிய படல் மின்னிணைப்பு

தெரிவு செய்யப்பட்ட மதத்தலங்களின் விபரங்கள் சரிவர இல்லாத காரணத்தினால் அவ் ஆலயங்களுக்கான சூரிய படல் மின்னிணைப்புக்கள் பொருத்தப்படுவதை அனுமதிக்க முடியாத நிலை அனுமதித்தல் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலயங்களின் பெயர்களுடன் அவற்றுக்கான ஏனைய தகவல்கள் சரியான முறையில் பெறப்பட்டிருக்கவில்லை.

தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி இலக்கம், வங்கிக் கணக்கிலக்கம் போன்ற முக்கியமான தரவுகளை சரியான முறையில் பெற்றுக் கொடுக்கப்படாததாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதேச செயலகங்கள் மூலம் குறித்த பிரதேச எல்லைக்குள் இருக்கும் பதிவு செய்யப்பட்ட இந்து ஆலயங்களின் தகவல்கள் பெறப்பட்டு அங்கு சேமிக்கப்படிருக்கும்.

இந்து ஆலய நிர்வாகி

அந்த தகவல் மூலத்தில் இருந்து இந்து ஆலயங்களின் தகவல்களைப் பெற முயற்சிக்கப்பட்டிருக்கும் போது முறையான தகவல்கள் கிடைக்கப் பெற்றிருக்கும் என இது தொடர்பில் முல்லைத்தீவில் உள்ள இந்து ஆலய நிர்வாகி ஒருவருடன் உரையாடிய போது அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

ஏனைய மத வழிபாட்டிடங்களின் முறையான தகவல்களைப் பெற்றுக் கொள்ள பயன்படுத்திய அதே வழிமுறையினை இந்து ஆலயங்களின் தகவல்களைப் பெறுவதற்கு பயன்படுத்தியிருக்கலாமே என அவர் மேலும் குறிப்பிட்டார்.

மின்சார சபையினரின் பொறுப்பற்ற செயல்பாடாக கூட இது இருக்கலாம்.

ஆலயங்களின் தகவல்களைப் பெற்று முழுமைப்படுத்தப்பட்ட தகவல்களை வழங்கவேண்டிய பொறுப்பில் உள்ளவர்களின் பொறுப்புணர்சியற்ற செயற்பாட்டின் விளைவு இது என்பதை மறுத்துரைக்க முடியாது.

முள்ளியவளையில் உள்ள சில ஆலயங்களில் இருக்கக் கூடிய தகவல்களை இல்லை என பதிவு செய்து இந்த வழங்கலுக்கான அறிக்கைகளை சமர்ப்பித்திருக்கின்றமை கவலைக்குரிய விடயமாகும்.

திட்டமிட்டு புறக்கணிப்பு

இந்த அடிப்படையில் இந்து ஆலயங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றனவா என இது தொடர்பில் விடயமறிந்த பலரால் சந்தேகம் எழுப்பப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளகத் தகவல்கள் மூலம் அறியப்படும் முல்லைத்தீவில் உள்ள இந்து ஆலயங்களிற்கு சூரிய படல் மின்னிணைப்புக்களின் போது இழைக்கப்படும் அநீதி தொடர்பில் உரிய அதிகாரிகளால் ஆராயப்பட வேண்டும்.

அத்தகைய ஆராய்வுகள் மூலமே இதன் உண்மைத் தன்மையை உணர முடியும்.அதன் பின்னரே தவறுகளை இனம் கண்டு அவற்றை சீர் செய்ய முடியும்.

விரைவான உரிய நடவடிக்கைகள் மூலம் ஏனைய மத வழிபாட்டுத் தலங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புக்களுக்கு சமமான வாய்ப்புக்களை இந்து ஆலயங்களுக்கும் பெற்றுக்கொடுக்க ஆவணை செய்ய வேண்டும் என சுட்டிக்காட்டப்படுவதும் நோக்கத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version