Home இலங்கை அரசியல் வன்முறைச் சம்பவங்களிலிருந்து விலகியிருங்கள்: சர்வோதயம் அமைப்பு கோரிக்கை

வன்முறைச் சம்பவங்களிலிருந்து விலகியிருங்கள்: சர்வோதயம் அமைப்பு கோரிக்கை

0

தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைச் சம்பவங்களில்
ஈடுபடுவதிலிருந்து மக்கள் விலகியிருக்க வேண்டும் என  ‘சர்வோதயம்’ அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் இன்று (21.09.2024) சனிக்கிழமை நடைபெறவிருக்கும் நிலையில்,
இது குறித்து ‘சர்வோதயம்’ அமைப்பால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும்
குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
எமது நாடு முன்னெப்போதுமில்லாத பல சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கும்
பின்னணியிலேயே இம்முறை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகின்றது.

பொருத்தமான வேட்பாளர்

கடந்த சில ஆண்டுகளாக நாம் மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்தோம். நம்மனைவருக்கும் முன்னால்
மிகமுக்கியமான பொறுப்பு இருக்கின்றது.

இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை
மீட்டெடுப்பதற்கு எவ்வாறு பங்களிப்புச்செய்யமுடியும் என்பது பற்றிச் சிந்திக்க
வேண்டும்.

நாட்டின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார நிலைவரத்தை
மேம்படுத்துவதற்கு ஏதுவான நடவடிக்கைகளைப் பின்பற்றி, தமது ஜனநாயக உரிமையைப்
பாதுகாத்துக்கொள்வதற்காக தாம் நம்பிக்கை வைத்திருக்கும் அரசியல் கொள்கைகளில்
நிலைத்திருந்து பொருத்தமான வேட்பாளருக்கு வாக்களித்துவிட்டு அன்றைய தினம்
அமைதியாக வீடுகளில் இருப்பதே பொருத்தமானதாகும்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 38 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில்
நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் சவால்களிலிருந்து நாட்டை
மீட்டெடுக்கக்கூடிய, சரியான நோக்கத்தையும், செயற்றிட்டத்தையும் கொண்ட ஒரு
வேட்பாளரை புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்வது பிரஜைகளாகிய எமது பொறுப்பாகும்.

முடிவை ஏற்றுக்கொள்ளல்

கட்சி, நிறம் மற்றும் உணர்வுகளுக்கு அப்பால் வேட்பாளர்களின் கொள்கையையும்,
செயற்றிட்டத்தையும் கருத்தில்கொண்டு,  அறிவுபூர்வமாக
வாக்கைப் பயன்படுத்த வேண்டும்.

அதேபோன்று தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட
அறிவுரைகளை உரியவாறு பின்பற்றி, வாக்கை வீணடிக்காமல் சரியாக அளிக்க வேண்டும்.

சுதந்திரமானதும், அமைதியானதும், நியாயமானதுமான தேர்தலை உறுதிப்படுத்துவதில்
அர்ப்பணிப்புடனும், தேர்தல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாதவாறும் செயற்பட
வேண்டும்.

தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவதிலிருந்து
மக்கள் விலகியிருக்க வேண்டும்.

அதேபோன்று மக்கள் அனைவரும் அவர்கள் விரும்புகின்ற வேட்பாளர்
வெற்றியடைந்தாலும், தோல்வியடைந்தாலும் நடுநிலையான மனதுடன் அந்த முடிவை
ஏற்றுக்கொள்ள வேண்டும் – என்றுள்ளது.

NO COMMENTS

Exit mobile version