கொழும்பு – ஹோமாகம பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து
உயிர்மாய்த்துள்ளார் என நுகேகொடை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் ஹோமாகம, கிரிவத்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை
மாணவி ஆவார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
இந்த மாணவி சுகயீனம் காரணமாக நீண்ட நாட்களாகப் பாடசாலைக்குச் செல்லாமல்
இருந்துள்ளார்.
பின்னர் இந்த மாணவி மீண்டும் பாடசாலைக்குச் சென்றுள்ள நிலையில், விடுமுறை
எடுத்த நாட்களுக்காக வைத்திய அறிக்கை ஒன்றை வழங்குமாறு பாடசாலையின் ஆசிரியர்
ஒருவர் கூறியுள்ளார்.
மனதளவில் பாதிப்பு
ஆனால், இந்த மாணவி வைத்திய அறிக்கையை வழங்கத் தவறியுள்ளார்.
இதனால் இந்த மாணவிக்குக் கடுமையாக தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த மாணவி பரீட்சைகளிலும் குறைந்த புள்ளிகளைப் பெற்றுள்ளதால்,
பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் துன்புறுத்தப்பட்டுள்ளார்.
இதனால், மனதளவில் பாதிக்கப்பட்ட மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்
என விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
என்று நுகேகொடை பொலிஸ் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
