சிங்கப்பூரில் விமானப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி இறுதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக பிற நாடுகளில் இருந்து தங்கள் நாட்டுக்கு வரும் விமான நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச்சாவடிகள் ஆணையம் (ICA) அறிக்கை அனுப்பியுள்ளது.
பயணிகளின் விபரங்கள்
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சிங்கப்பூருக்கு வரும் பயணிகளின் விபரங்கள் மற்றும் ஆவணங்களை முன்கூட்டியே அனுப்பி வைக்க வேண்டும்.
அதனை ஆய்வு செய்த பிறகு தகுதியான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே அவர்கள் சிங்கப்பூர் வர அனுமதிக்கப்படுவார்கள்.
இல்லையெனில், அவர்கள் புறப்படும் விமான நிலையத்திலே தடுத்து நிறுத்தப்படுவார்கள்.
சிறை தண்டனை
குறிப்பாக, உரிய விசா அல்லது ஆறு மாத காலத்திற்கு செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாத பயணிகளுக்கு அனுமதி கிடையாது.
சிங்கப்பூருக்குச் செல்ல விரும்பும் பயணிகள், விமான பயண சீட்டு எடுப்பதற்கு முன் ஐசிஏ தளத்தின் வழியாக நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும், ஐசிஏ நேரடியாக அனுமதி அளிக்கும் வரை பயணத்தை திட்டமிடக் கூடாது.
இந்த விதிகளை கடைபிடிக்காத விமான நிறுவனங்களுக்கு ரூபாய் ஏழு லட்சம் வரையில் அபராதம் விதிக்கப்படும் மேலும், தகுதியான ஆவணங்கள் இல்லாத பயணியை அனுமதித்த விமான நிறுவன ஊழியர்களுக்கு ஆறு மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
