Home இலங்கை அரசியல் தமிழ் மக்கள் பொதுச் சபையின் விசேட சந்திப்பு

தமிழ் மக்கள் பொதுச் சபையின் விசேட சந்திப்பு

0

மக்கள் அமைப்பாகிய தமிழ் மக்கள் பொதுச் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சந்திப்பொன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது இன்று(29.06.2024) வவுனியா விருந்தினர் விடுதியில், காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 4:00 மணி வரை இடம்பெற்றுள்ளது.

புரிந்துணர்வு உடன்படிக்கை 

இந்த சந்திப்பின் முடிவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதற்காக, கட்சிகளும் மக்கள் அமைப்பும் ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த உடன்படிக்கையானது எதிர்வரும் ஆறாம் திகதி யாழ்ப்பாணத்தில் சம்பிரதாயபூர்வமாக கையெழுத்திடப்படவுள்ளது.

இவ்வாறு மக்கள் அமைப்பும் கட்சிகளும் சம அளவு பிரதிநிதித்துவம் வகிக்கும் பொதுக் கட்டமைப்பானது, இன்றிலிருந்து தமிழ்த் தேசியப் பேரவை -Tamil national forum- என்று அழைக்கப்படவுள்ளது.

தமிழ்த் தேசியப் பேரவையானது ஜனாதிபதித் தேர்தலை நோக்கிப் பல உப கட்டமைப்புகளை உருவாக்கும் என்பதுடன் உப கட்டமைப்புக்கள் எல்லாவற்றிலும் கட்சிகளும் மக்கள் அமைப்பின் பிரதிநிதிகளும் சம அளவில் உள்வாங்கப்படவுள்ளனர். 

இந்த கட்டமைப்புகளில் ஒன்று யார் பொது வேட்பாளர் என்பதை தீர்மானிக்கும் எனவும் மற்றொன்று, பொது வேட்பாளருக்கு உரிய தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பதுடன் மற்றொன்று, நிதி நடவடிக்கைகளை முகாமை செய்யும் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை முன் நிறுத்தும் வேலைகளை தமிழ்த் தேசிய பேரவையானது முன்னெடுக்கவுள்ளது.

மேற்படி சந்திப்பில், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஐந்து கட்சிகளும் விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியும் ஐங்கரன் நேசனின் தமிழ் தேசிய பசுமை இயக்கமும் என ஏழு தமிழ்த் தேசியக் கட்சிகள் கலந்து கொண்டுள்ளன.

NO COMMENTS

Exit mobile version