Home இலங்கை அரசியல் இரண்டே வருடங்களில் நாட்டை மீட்ட ரணிலுக்கு ஆதரவு : சிறிலங்கா ஜனநாயக கட்சி அறிவிப்பு

இரண்டே வருடங்களில் நாட்டை மீட்ட ரணிலுக்கு ஆதரவு : சிறிலங்கா ஜனநாயக கட்சி அறிவிப்பு

0

இரண்டே வருடங்களில் நாட்டை மீட்ட ஜனாதிபதி ரணிலை பலப்படுத்தி நாட்டை முன்னேற்றவே எமது கட்சி அவரை ஆதரிப்பதாக சிறிலங்கா ஜனநாயக கட்சியின் (SLDP) தலைவர் அன்வர் எம்.முஸ்தபா (Anvar M.Musthafa) தெரிவித்துள்ளார்.

அம்பாறை (Ampara) – சம்மாந்துறை பகுதியில் சிறிலங்கா ஜனநாயக கட்சி
தலைமையகத்தில் நேற்று (19) நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பான
விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “கடந்த காலங்களில் நாடு பொருளாதார பின்னடைவை சந்தித்து
வங்குரோத்து நிலைக்கு சென்று கொண்டிருந்த போது இப்போது நாட்டை ஆட்சி செய்ய
கேட்கும் சஜித் பிரேமதாச (Sajith Premadasa), அனுரகுமார (Anura Kumara Dissanayake) போன்றோர் காணாமல் போய்
இருந்தார்கள்.

 நாட்டை பொறுப்பேற்ற ரணில்

ஆனால் தேசியப்பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றம் வந்த ரணில்
விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தைரியமாக முன்வந்து நாட்டை பொறுப்பேற்றார். மேலும் இரண்டு
ஆண்டுகளில் இலங்கையை பொருளாதார சீர்கேட்டில் இருந்து மீட்டும் காட்டினார்.

எனவேதான் இரண்டே வருடங்களில் நாட்டை மீட்ட ஜனாதிபதி ரணிலை பலப்படுத்தி தலைசிறந்த நாடாக முன்னேற்றவே எமது கட்சி ஜனாதிபதி ரணிலை ஆதரிக்க தீர்மானித்தது.

பெட்ரோல், டீசல், மருந்துகள், பால்மா, எரிவாயு
போன்றவற்றுக்காக நாட்கணக்கில் வெயில் மழையிலும் பட்டினியோடு இருந்த
இலங்கையர்களை வீட்டில் நிம்மதியாக தூங்க வைத்த பெருமை ஜனாதிபதி ரணிலை
சாரும்.

வர்த்தகர்கள், பொருளாதார சிதைவினால் இன்னல் உற்றவேளை ரணிலின் அனுபவ முதிர்ச்சி அரசியல் டொலரை ஒரு நிலையான இடத்தில் நிலைநிறுத்தியதை நாம்
மறந்து விட முடியாது.

ரணிலை ஆதரிக்கும் மக்கள் 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீழ்ந்த நாடுகளில் விரைவாக
எழுந்த நாடாக இலங்கை மிளிர ரணிலின் அரசியல் முதிர்ச்சியும் சர்வதேச
அரசியல் அனுபவமும் திறமையுமே காரணமாகும்.

மக்கள் செல்வாக்கு நிறைந்த 100க்கும்
அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களையும், இலங்கையின் அதிக அரசியல் கட்சிகளையும்,
அதிகூடிய இலங்கையர்களின் நன்மதிப்பையும் பெற்ற ஜனாதிபதி மக்களுக்கு கஷ்டம்
என்றவுடன் எவ்வாறு முன்வந்து தீர்வை கண்டாரோ அதே போன்று மக்களுக்கும் ரணிலை
ஜனாதிபதியாக மீண்டும் ஆட்சி பீடம் ஏற்ற தயாராகி விட்டார்கள்.

உணர்ச்சிவசப்படுத்தும் பேச்சுக்களுக்கு மக்கள் அடிபணியாமல் நாட்டில் மீண்டும்
அரகல ஒன்றை தவிர்க்கும் விதமாக பெரும்பான்மை வாக்குகளுடன் ஜனாதிபதி ரணிலை
ஆதரிப்பார்கள்.

பெரும்பான்மை சிங்கள மக்கள் மட்டுமன்றி தமிழ், முஸ்லிம்,
கிறிஸ்தவ, மலையக மக்களின் அதி கூடிய வாக்குகளும் ரணிலுக்கே உள்ளது என்பதை
செப்டம்பர் 22 இந்த நாடு தெரிந்து கொள்ளும்.“ என தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version