Home இலங்கை சமூகம் ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கில் இன்று முதல் வைப்பிலிடப்படவுள்ள பணம்

ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கில் இன்று முதல் வைப்பிலிடப்படவுள்ள பணம்

0

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்குமான மாதாந்த இடைக்கால கொடுப்பனவு இன்று முதல் அவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ளது.

ஓய்வூதியர்களுக்கான இடைக்கால கொடுப்பனவான 3000 ரூபாவை இவ்வாறு வைப்பிலிடுவதற்கு ஓய்வூதிய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனாதிபதியின் பணிப்புரை

ஓய்வூதியர்களுக்கான குறித்த இடைக்கால கொடுப்பனவு வழங்கப்படாமை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்கான பணத்தை திறைசேரியில் இருந்து வழங்குமாறு  ஜனாதிபதியினால் பணிப்புரை விடுக்கப்பட்டது.

இதற்கமைய, திறைசேரியிலிருந்து தேவையான பணம் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளதோடு, அதனை இன்று முதல் ஓய்வூதியதாரர்களின் கணக்கில் வைப்பிலிட ஓய்வூதிய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக ரூ.3000 வழங்க 24/08/2024 திகதியிட்ட 02/2024 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கை வெளியிடப்பட்ட போதிலும், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருக்கவில்லை.

கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, 679,960 ஓய்வூதியதாரர்களுக்கு இந்த மாதத்திற்கான 2,021 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டை திறைசேரி செயற்பாட்டுத் திணைக்களம், ஓய்வூதியத் திணைக்களத்திற்கு வழங்கியுள்ளது.

அதன்படி, இந்தக் கொடுப்பனவை இன்று முதல் வழங்க ஓய்வூதியத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது.

அரச மற்றும் தனியார் வங்கிகளில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கில் இன்று பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதுடன், தபால் நிலையங்கள் மற்றும் உப அலுவலகங்களில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் இந்தக் கொடுப்பனவை எதிர்வரும் 18ஆம் திகதி  முதல் பெற்றுக்கொள்ள முடியும்.

you may like this

NO COMMENTS

Exit mobile version