Home முக்கியச் செய்திகள் இந்திய பழங்குடியினருடன் மரபணு தொடர்பு! இலங்கை வேடுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

இந்திய பழங்குடியினருடன் மரபணு தொடர்பு! இலங்கை வேடுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

0

இலங்கையின் ஆதிக்குடிகள் என நம்பப்படும் வேடுவ இன மக்கள், ஐந்து இந்திய பழங்குடி இன மக்களுடன் நெருங்கிய மரபணு பிணைப்புகளை கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்திய மற்றும் இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்றால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

இதன்படி, ஒடிசாவில் உள்ள சந்தால் மற்றும் ஜுவாங் பழங்குடியினருடனும், நெருங்கிய தொடர்பினை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரபணு ஒற்றுமை

அத்துடன், கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள இருளர், பணியா மற்றும் பள்ளர் போன்ற திராவிட மொழி பேசும் பழங்குடியினருடனும் இலங்கையின் வேடுவர்கள் வலுவான மரபணு ஒற்றுமையைப் பகிர்ந்து கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சிங்கள அல்லது தமிழ் மக்களை விடவும், இந்த ஐந்து பழங்குடியினருடன் வேடுவ இனத்தவருக்கு அதிக மரபணு ஒற்றுமை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நவீன மனிதர்கள் கடந்த 30 ஆயிரம் ஆண்டுகளாக இலங்கையை ஆக்கிரமித்துள்ளதாக தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் தெரிவித்துள்ளனர்.

வேடுவர்களான பழங்குடி மக்கள் இலங்கையின் ஆரம்பகால குடிமக்களின் நேரடி சந்ததியினர் என்று நம்பப்படுகிறது.

இந்திய மக்களுடனான தொடர்பு

வேதாக்கள் நீண்ட காலமாக மானுடவியலாளர்கள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் விஞ்ஞானிகளை அவர்களின் தனித்துவமான மொழி மற்றும் கலாசாரத்தின் காரணமாக கவர்ந்துள்ளதாக ஹைதராபாத்தில் உள்ள செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் விஞ்ஞானியும் ஆய்வு ஒத்துழைப்பாளருமான குமாரசாமி தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வு அவர்களின் மரபணு தோற்றம் மற்றும் இந்திய மக்களுடனான தொடர்புகளை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேடுவர்களின் மூலமொழி மொழியியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அது அறியப்பட்ட எந்த மொழியுடனும் தொடர்பில்லாததாக உள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Source: https://ibctamil.com/article/sri-lanka-vedda-genetic-link-with-ethnic-indians-1713709662?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version