Home இலங்கை குற்றம் பறக்கும் விமானத்தில் குழப்பம் விளைவித்த புலம்பெயர் தமிழர் இலங்கையை விட்டு வெளியேற தடை

பறக்கும் விமானத்தில் குழப்பம் விளைவித்த புலம்பெயர் தமிழர் இலங்கையை விட்டு வெளியேற தடை

0

வெளிநாட்டிலிருந்து இலங்கை விமானத்தில் குழப்பம் விளைவித்த புலம்பெயர் தமிழரான சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மும்பையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் குழப்பம் விளைவித்த சந்தேக நபரை, தலா ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டார்.

சுவீடன் மற்றும் இலங்கையின் இரட்டைக் குடியுரிமை பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சந்தேக நபர், கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

விமானப் பணிப்பெண்

இந்தியாவின் மும்பையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் அதிகாலை 12.45 மணியளவில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, ​​குடிபோதையில் இருந்த சந்தேக நபர், இரண்டு விமானப் பணிப்பெண்களை பாலியல் சீண்டல் செய்ததாகவும், மற்ற பயணிகளை துன்புறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.

இதன் காரணமாக விமானத்தில் பணியிலிருந்து பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேக நபரைக் கட்டுப்படுத்தியதாகவும், பின்னர் அது குறித்து விமானிகளுக்குத் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

மருத்துவ அறிக்கை

விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர், விமான நிலைய பொலிஸாரால் சந்தேக நபரான தமிழர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விவரங்களை வழங்கிய விமான நிலைய பொலிஸார் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாரால் மருத்துவ பரிசோதனைக்காக ஆஜர்படுத்தப்பட்டதாகவும், சம்பவம் நடந்த நேரத்தில் சந்தேக நபர் அதிகளவு மது அருந்தியிருந்ததாக மருத்துவ அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/sri-lankan-who-misbehaved-in-the-plane-court-order-1741833168

NO COMMENTS

Exit mobile version