Home இலங்கை அரசியல் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு குறித்து முன்னாள் தமிழ் எம்.பி வெளியிட்ட தகவல்

தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு குறித்து முன்னாள் தமிழ் எம்.பி வெளியிட்ட தகவல்

0

தமிழரசுக் கட்சியின் நேற்றைய அறிவிப்பின் மூலம் தமிழரசுக் கட்சியினுடையதே ஆதிக்கம் நீங்கள் வந்து சேருங்கள் என்றவாறான
நிலைப்பாட்டையே கூறியிருப்பதாக யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம்
சித்தார்த்தன் (D.Siddarthan) தெரிவித்துள்ளார்.

தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் பொதுச்சபை கூட்டம் வவுனியா விருந்தினர்
விடுதியில் இன்று (29) இடம்பெற்றது. அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்
போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”இன்றையதினம் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினோம். தமிழ் கட்சிகள்
அனைத்தும் ஒற்றுமையாக செயற்படவேண்டும் என்பது நாங்கள் தொடர்ச்சியாக கூறி
வருகின்ற விடயம்.

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு

ஒரு கட்சி மற்றைய கட்சியின் மீது ஆதிக்கம் செலுத்துவதை விடுத்து
உண்மையான கூட்டாக செயற்படவேண்டும்.

அன்று தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் நாங்கள் கூட்டமைப்பாக செயற்பட்ட போது
பல பிரச்சினைகள் உருவாகியிருந்தது.

கடந்த உள்ளூராட்சி தேர்தலில் தாங்கள் தனியாக
போட்டியிடப்போவதாக தமிழரசுக்கட்சி முடிவெடுத்திருந்தது. அதன் பின்னர்
சம்பந்தனுடன் நாங்கள் கலந்துரையாட சென்றபோதும் அவர் மிகத்தெளிவாக அதே கருத்தை
சொல்லியிருந்தார். நீங்கள் தமிழரசுக்கட்சியை இல்லாமல் செய்ய
பார்க்கின்றீர்களா எனவும் அவர் சொன்னார்.

இருப்பினும் கூட்டமைப்பை விட்டு தமிழரசுக்கட்சி சென்றாலும் நாங்கள் இயங்காமல்
இருக்கமாட்டோம் தானே. அப்படி இருக்கவும் கூடாது. எனவே நாங்கள் ஜனநாயக
தமிழ்த்தேசிய கூட்டமைப்பினூடாக உள்ளூராட்சி தேர்தலில் வேட்புமனுவை
தாக்கல் செய்தோம்.

இப்போது பல கட்சிகள் இணைந்திருக்கின்றது.

அவர்கள் தான் விட்டுச்சென்றவர்கள். எனவே அவர்கள்தான் வரவேண்டும். அவர்கள்
வந்தால் எமது கட்சிகளோடும், சிவில் அமைப்புகளின் கூட்டோடும்
கலந்துரையாடிய பின்னரே முடிவினை எடுக்கலாம்.

தனிப்பட்ட முறையில் சொன்னால்
அவர்களது வரவு இந்த கட்டமைப்பை பெரிதாக்கும். அது எனக்கும் விருப்பம்.
அனைவரும் இணைவது தமிழ்மக்களுக்கு பலமாகவும் இருக்கும்.

ஆனால் அவர்கள் சொல்லியிருப்பது தமிழரசுக்கட்சி சின்னத்தில் என்று.

 தமிழரசுக் கட்சியினுடைய ஆதிக்கம்

இது பழையபடி
தமிழரசுக் கட்சிதான் முடிவெடுக்கப்போகின்றது என்ற அடிப்படையிலும், ஆதிக்கம்
தமிழரசுக் கட்சியினுடையதே நீங்கள் சேருங்கள் உங்களுக்கு நாங்கள் பார்த்து
தருவோம் என்றவாறான ஒரு நிலைப்பாட்டையே கூறியிருக்கிறார்கள். அப்படியான
நிலைப்பாட்டில் நாங்கள் போகமுடியாது.

அனைவரும் சமபங்காளிகளாக ஒரு கூட்டமைப்பாக
இணைந்தால் அதில் சேரமுடியும். அதற்கான நேரகாலம் இருக்கின்றதோ தெரியாது. அவர்கள்
மூன்று நாட்களையே அவகாசமாக கொடுத்துள்ளனர்.

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு சங்கு சின்னத்தை எடுப்பதற்கான ஒரு
அபிப்பிராயம் இருந்தது. அதற்கான முயற்சியினை செய்வதாக
தீர்மானித்திருக்கின்றோம். அதனை செய்வோம்.

அத்துடன் இளைஞர்களையும் நிச்சயமாக உள்ளே கொண்டுவரவேண்டும். அதேபோல அனுபவம்
உள்ளவர்களும் இருக்கவேண்டும். இருந்தாலும் அப்படி ஒரு கருத்தாக்கம் மக்கள்
மத்தியில் இல்லை.

தேர்தலில் தாங்கள் போட்டியிடுவதற்காக சிலர் உருவாக்கும் ஒரு
கருத்தே இது. இது கட்சிகளை பலவீனப்படுத்துகின்ற ஒரு விடயம். நாங்கள்
கடந்த முறையும் இளைஞர்களை நிறுத்தியிருந்தோம். இப்போதும் நிச்சயமாக இளைஞர்கள்
கேட்பார்கள்.

பொதுசபைக் கூட்டம்

தமிழ் கட்சிகள் பிரிந்து நிற்பது பிரதிநித்துவத்தில் நிச்சயமாக தாக்கத்தை
ஏற்படுத்தும். அதற்காகவே ஒரு கூட்டமைப்பை உருவாக்கவேண்டும் என்று
பார்க்கின்றோம். சிலர் சேரமுடியாத நிலை இருக்கிறது. குறிப்பாக டக்ளஸ்
தேவானந்தாவும் நாங்களும் சேருவது கஸ்டமான விடயம்.

அரசுடன் ஒரு நாடாளுமன்ற
உறுப்பினர் இருந்தால் அரசாங்கம் சொல்வதையே சொல்லவேண்டிய சங்கடம் இருக்கிறது. எமது சார்பாக கதைக்க முடியாது. மௌனியாகவே இருக்கவேண்டும். அபிவிருத்தி பணிகள்
செய்யலாம். ஆனால் 1956 இற்குப் பின்னர் நியாயமான ஒரு தீர்வினை நோக்கியே
தமிழ்மக்கள் வாக்களித்து வருகின்றனர்“ என தெரிவித்தார்.

இதேவேளை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பொதுசபைக் கூட்டம்
வவுனியாவில் உள்ள வாடி வீட்டில் கட்சியின் தலைவர் தர்மலிங்கம்
சித்தார்த்தன் தலைமையில் இடம்பெற்றது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளராக நாகலிங்கம் இரட்ணலிங்கத்தை பொதுச்
சபையினால் உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யும் செயற்பாடு இன்று இடம்பெற்றதுடன் கட்சியினுடைய அடுத்த கட்ட செயற்பாடுகள் தொடர்பிலும் இதன்போது
கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version