Home முக்கியச் செய்திகள் மாணவர்களால் ஆசிரியைக்கு ஏற்பட்ட அசௌகரியம்

மாணவர்களால் ஆசிரியைக்கு ஏற்பட்ட அசௌகரியம்

0

ஆசிரியை ஒருவரின் புகைப்படத்தை நிர்வாண புகைப்படத்துடன் இணைத்து முகநூலில் பதிவேற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படும் மாத்தளை(matala) பிரதான பாடசாலை ஒன்றின் இரண்டு மாணவர்களை மாத்தளை காவல்துறையினர் நேற்று (12ஆம் திகதி) கைது செய்துள்ளனர்.

குறித்த ஆசிரியை பணிபுரியும் மாத்தளை நகரில் உள்ள பிரதான கலப்பு பாடசாலை ஒன்றில் பத்தாம் தரத்தில் கல்வி கற்கும் மாத்தளை ஹுலங்காமுவ மற்றும் வாரியபொல பிரதேசங்களில் வசிக்கும் இரண்டு பாடசாலை மாணவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஆசிரியை பொல்கொல்ல மகாவலி கல்வி பீடத்தில் கல்வி பயின்ற நிலையில் ஒரு வருட பயிற்சிக்காக மாத்தளை கல்லூரி ஒன்றில் நடன ஆசிரியையாக பணிபுரிய வந்துள்ளார்.

காவல்துறையில் முறைப்பாடு

தனது புகைப்படத்தில் முகத்தை கணினி மூலம் வெட்டியெடுத்து நிர்வாண புகைப்படம் ஒன்றுடன் இணைத்து முகநூலில் வெளியிடப்பட்டுள்ளதாக குறித்த ஆசிரியை மாத்தளை காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

மாத்தளை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் லலித் ரோஹண கமகேவின் பணிப்புரையின் பேரில், மாத்தளை காவல் நிலையத்தின் பிரதான காவல்துறை பரிசோதகர் உபுல் குணவர்தன தலைமையில் மாத்தளை காவல்துறை சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளினால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நன்னடத்தை அலுவலகத்தில் மாணவர்கள்

காவலில் வைக்கப்பட்டுள்ள இரு பாடசாலை மாணவர்களும் மாத்தளை நன்னடத்தை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, நன்னடத்தை அறிக்கைகளுடன் மாத்தளை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version