Home இலங்கை அரசியல் மலையக மக்களை வடக்கு-கிழக்கில் குடியேற்றத் தயார்! சுமந்திரன் பகிரங்க அறிவிப்பு

மலையக மக்களை வடக்கு-கிழக்கில் குடியேற்றத் தயார்! சுமந்திரன் பகிரங்க அறிவிப்பு

0

வடக்கு, கிழக்கில் குடியேற வருமாறு மலையக உறவுகளை பாசத்துடன்
அழைக்கின்றோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்
தெரிவித்துள்ளார்.

அரசு பாதுகாப்பான காணி தர மறுத்தால் வடக்கு, கிழக்கில் குடியேற மலையக மக்கள் தயார் என்ற மனோ கணேசன் எம்.பியின் அறிவித்தலை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்த சுமந்திரன், அதனை தொடர்ந்து மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மனதார உங்களை வரவேற்கின்றோம்

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,”கடந்த வாரம் கண்டி, கம்பளைக்கு உங்களோடு சென்ற போது மலையகத்தில் இருந்து
வடக்கு, கிழக்குக்கு வந்து குடியேறுமாறு எமது தமிழ் உறவுகளை அழைப்பதற்குத்
தயாராகவே வந்தோம்.

ஆனால், நீங்களும் அவர்களும் அதற்கான விருப்பத்தைத்
தெரிவிக்கும் வரை பகிரங்கமாக அதைச் சொல்வதைத் தவிர்த்திருந்தோம்.

இப்போது அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, மக்களும் அதை விரும்புவதாகச்
சொல்கின்றார்கள் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மிகுந்த பாசத்தோடு மனதார உங்களை வரவேற்கின்றோம். ஏற்கனவே எம்மில் பலர் தங்கள்
சொந்த நிலங்களைக் கொடுப்பதற்கு முன்வந்துள்ளார்கள்.

அதேபோல் அரச காணிகளையும் வாழ்விடங்களுக்கும் பயிர்ச் செய்கை, தோட்டம்
போன்றவற்றுக்கும் பெற்றுத் தர எம்மால் முடிந்த முயற்சிகளைச் செய்து
கொடுப்போம்.”என்றும் சுமந்திரன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

NO COMMENTS

Exit mobile version