Home இலங்கை அரசியல் புதிய ஜனாதிபதியிடம் சுரேஷ் பிரேமச்சந்திரன் முன்வைத்துள்ள கோரிக்கை

புதிய ஜனாதிபதியிடம் சுரேஷ் பிரேமச்சந்திரன் முன்வைத்துள்ள கோரிக்கை

0

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்
தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, 

“பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு மத்தியில் ஜனாதிபதி பொறுப்பை நீங்கள்
ஏற்றுக்கொண்டுள்ளீர்கள். ஒருபுறம் பொருளாதார ரீதியில் வங்குரோத்து அடைந்துள்ள
நாடு. இலஞ்சம் ஊழல். மறுபுறம் முப்பது வருடங்களாக நடைபெற்ற பாரிய யுத்தம்.

இதனால், ஏற்பட்ட இழப்புகளும் பொருளாதார அழிவுகளும் இவை அனைத்தையும் தீர்த்து
வைக்க வேண்டிய ஒரு பொறுப்பிலும் நீங்கள் இருக்கின்றீர்கள்.

இன, மத பேதமில்லாமல் நாமெல்லோரும் இலங்கையர்கள் என்ற வகையில் நாம் செயற்பட
வேண்டும் என்றும் நீங்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறீர்கள். ஆனால், இந்த
நாடு நூற்றாண்டு காலமாக இன, மத, மொழி ரீதியாக பிரிந்து போயிருக்கின்றது.

நாட்டின் நிலைமை 

பௌத்தத்திற்கு முதலிடம், சிங்களத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து, பௌத்தத்திற்கு
முதலிடம் என்ற பெயரில் முப்படைகளையும் பயன்படுத்தி தமிழர் பகுதிகளில்
புதியபுதிய புத்த விகாரைகளை அமைக்கும் அரசின் செயற்பாடுகள் போன்றவை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறான சூழ்நிலையில், சமத்துவமோ,
புரிந்துணர்வோ எவ்வாறு ஏற்படும் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நாம்
நம்புகின்றோம்.

அது மட்டுமன்றி, இந்த நாட்டை பொருளாதார ரீதியாக வளப்படுத்த வேண்டுமாக
இருந்தால் அதற்கான சர்வதேச முதலீடுகளை நாங்கள் கொண்டுவர வேண்டுமென நாங்கள்
விரும்பினால் இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை ஒன்று ஏற்பட வேண்டும்.

அந்த
அரசியல் ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட வேண்டுமாக இருந்தால், நீண்டகாலமாக இழுபறி
பட்டுக்கொண்டிருக்கும்

தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்குக் கௌரவமான தீர்வு ஒன்று எட்டப்பட வேண்டும்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார, அரசியல்
பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் காண்பதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு
நாங்கள் துணையாக இருப்போம் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் ஜனநாயக ரீதியில் முதன்முறையாக ஒரு இடதுசாரிக்
கட்சியாக நீங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருக்கின்றீர்கள். ஆகவே,
அந்தவகையில் நீண்டகாலமாக இழுபறிபட்டுக்கொண்டிருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு
தீர்வு காண்பதற்கு நீங்கள்தான் தகுதிவாய்ந்தவர் என்று நாங்கள் உறுதியாக
நம்புகின்றோம்.

உங்கள் முயற்சிகளும் சிந்தனைகளும் வெற்றியடைய மீண்டும் ஒருமுறை உங்களுக்கு
வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்” என வலியுறுத்தியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version