Home இலங்கை அரசியல் யாழில் வேட்புமனு தாக்கல் செய்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

யாழில் வேட்புமனு தாக்கல் செய்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

0

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் (EPDP) இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.

யாழ் மாவட்ட உதவி தேர்தல் அத்தாட்சி அலுவலகத்தில் இன்றையதினம் (07) நண்பகல் 12 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் அமைச்சரும், கட்சியின் செயலாளர் நாயகமுமான
டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தலைமையில் குறித்த வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி

நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் ஈ.பி.டி.பி வேட்பாளர்களின் பெயர் பட்டியல் உள்ளடங்கிய வேட்பு மனுவை யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்ட அத்தாட்சி அலுவலரிடம் கையளித்தார்.

வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா ”வடக்கின் ஐந்து மாவட்டங்கள் கிழக்கில் மூன்று மாவட்டங்கள் கொழும்பு உள்ளடங்கலாக ஒன்பது மாவட்டங்களில் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் ஈ.பிடி.பி தனது சின்னமான வீணைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளது என குறிப்பிட்டார்.

இதன்போது கொழும்பில் இம்முறை ஈ.பி.டி.பி போட்டியிடுவதற்கு விசேட காரணங்கள் ஏதும் உண்டா என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த அவர்,கொழும்பிலுள்ள எமது கட்சியின் ஆதரவாளர்கள் கொழும்பிலும் போட்டியிடுமாறு கோரிக்கை விடுத்துவந்திருந்தனர்.அவர்களது கோரிக்கையின் அடிப்படையில் இம்முறை அந்த மாவட்டத்திலும் போட்டியிடுகின்றது.

கொழும்பில் போட்டி

இதேநேரம் ஈ.பிடி.பி ஆரம்பகாலம் முதற்கொண்டு தொடர்ச்சியாக கூறிவருகின்ற தேசிய நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அதை வலுப்படுத்தும் நோக்குடன் கொழும்பு மாவட்டம் பல்லின பல மொழி பேசும் மக்கள் வாழும் இடமாக இருப்பதனால் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில் வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.

அந்தவகையில் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது கட்சியின் இலக்கை அடைவதற்கு வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் எமது மக்கள் எமது கட்சிக்கு அணிதிரண்டு வாக்களித்து எம்மை வெற்றிபெறச் செய்வார்கள் என நம்புகின்றேன்“ என அவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (EPDP) வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஈபிடிபி கட்சியின் வன்னி தேர்தல் மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி ஒன்பது மாவட்டங்களில் போட்டியிடவுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்கள் – பிரதீபன், கஜிந்தன் 

NO COMMENTS

Exit mobile version