மட்டக்களப்பு ஏறாவூர் காவல்துறை பிரிவிலுள்ள பலாச்சோலை பகுதியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்து
போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த
இரு ஆண்களை 2 கிராம் 1300 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று
செவ்வாய்க்கிழமை (16) இரவு கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக காவல்துறையினர்
தெரிவித்தனர்.
மட்டு தலைமையக காவல்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து குறித்த தங்கு
விடுதியை சம்பவ தினமான நேற்று இரவு காவல்துறையினர் முற்றுகையிட்டனர்.
இரண்டு வியாபாரிகள் கைது
இதன்போது அங்கு தங்கியிருந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 21, மற்றும் 25
வயதுடைய இரு வியாபாரிகளை கைது செய்ததுடன் ஒருவரிடம் ஒரு கிராம் 800 மில்லி
கிராம், மற்றவரிடம் ஒரு கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருட்களை மீட்டனர்.
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
இதில் கைது செய்யப்பட்ட கொக்குவில் சிவன் கோவில் வீதியைச் சேர்ந்த பிரதான
வியாபாரி கடந்த மாதம் 29 ம் திகதியில் இருந்து தங்கு விடுதியில் ஒரு நாளைக்கு
2 ஆயிரம் ரூபா பணம் செலுத்தி தங்கி வந்துள்ள நிலையில் அதே பிரதேசத்தைச்
சேர்ந்த வியாபார நண்பன் கடந்த 5ம் திகதி அந்த விடுதிக்கு சென்று பிரதான
வியாபாரியுடன் தங்கியிருந்து போதை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளது
காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக
காவல்துறையினர் தெரிவித்தனர்.
