இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு
ஒப்பந்தத்தை அநுர அரசு பகிரங்கப்படுத்தும் என்ற நம்பிக்கை கிடையாது. முன்னாள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியா தொடர்பான ஒருசில விடயங்களில்
தற்றுணிவுடன் செயற்பட்டார். அந்தத் தற்றுணிவு ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்கவுக்குக் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் விமல்
வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர்
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதித் தேர்தல்
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“தேசிய மக்கள் சக்தி பொய் மற்றும் வெறுப்பை மாத்திரம் முன்னிலைப்படுத்தி
ஆட்சிக்கு வந்தது. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத்
தேர்தலில் தவறான அரசியல் தீர்மானம் எடுத்ததை மக்கள் தற்போது
விளங்கிக்கொண்டுள்ளார்கள்.
அதனையே நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத்
தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
பெரும்பான்மைப் பலம் உள்ளது என்ற ஆணவத்தில் அநுர அரசு தான்தோன்றித்தனமாகச்
செயற்படுகின்றது.
2020ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கோட்டபய ராஜபக்ச அரசுக்கும்
பெரும்பான்மைப் பலம் இருந்ததையும், அந்தப் பலம் இரண்டாண்டுக்குள்
பலவீனமடைந்ததையும் அநுர அரசு நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்தியாவுடன் அரசு அண்மையில் கைச்சாத்திட்ட ஒப்பந்தங்களின் விவரங்கள்
இதுவரையில் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை.
இந்த விடயத்தில் அரசு
வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவில்லை.
பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிப்பதாயின்
அதற்கு இந்தியாவின் அனுமதியைப் பெற வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிடுவது
வேடிக்கையாகவுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
கடந்த காலங்களில் இதனைக் காட்டிலும் இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட பல
ஒப்பந்தங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு
ஒப்பந்தத்தை இந்த அரசு பகிரங்கப்படுத்தும் என்ற நம்பிக்கை கிடையாது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியா தொடர்பான ஒருசில விடயங்களில்
தற்றுணிவுடன் செயற்பட்டார்.
அந்தத் தற்றுணிவு ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்கவுக்குக் கிடையாது.
சர்வதேச நாணய நிதியத்தின் விவகாரத்தில் அநுர அரசு நாணய நிதியத்தின் சகல
நிபந்தனைகளுக்கும் அடிபணிந்துள்ளது. மின் கட்டண அதிகரிப்பு ஊடாக இதனை
எதிர்வரும் மாதமளவில் விளங்கிக்கொள்ள முடியும்” – என குறிப்பிட்டுள்ளார்.
