உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சாட்சியம் வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறப்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் ஊடகச் செயலாளரான அசாத் மௌலானாவை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
அசாத் மௌலானா
அத்துடன், அசாத் மௌலானாவின் சாட்சியங்களை உள்ளடக்கிய செனல் 04 காணொளியில் சாட்சியம் வழங்கிய ஏனையவர்களையும் விசாரணைக்காக இலங்கைக்கு அழைப்பது தொடர்பில் அரசாங்கம் முன்னெடுப்புகளையும் மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்தவொரு குற்றச் செயல்களிலும் எவரேனும் ஒருவர் ஈடுபட்டால் தகுதி தராதரம் பாராது அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அசாத் மௌலானாவை விசாரணைகளுக்காக இலங்கைக்கு அழைத்து வரும் விடயத்தை அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
