இலங்கையின் சிறைச்சாலைகளில் அதிகரித்து வரும் நெரிசலைக் குறைப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில், பொலிஸ் திணைக்களத்தின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெறுவதற்கு பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழு கவனம் செலுத்தியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், போதைப்பொருள் தொடர்பான கைது முதல் வழக்குத் தாக்கல் செய்வது வரையிலான செயல்முறைகளில் காணப்படும் தாமதங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறிப்பாக, அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகளைப் பெறுவதில் ஏற்படும் தாமதம் காரணமாக சந்தேகநபர்கள் நீண்ட காலம் விளக்கமறியலில் வைக்கப்படுவதும், இதனால் சிறைச்சாலைகளில் நெரிசல் அதிகரிப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
போதைப்பொருள் விற்பனையாளர்களை கைது செய்வதுடன் மட்டுப்படாமல், கடத்தல் வலைப்பின்னல்கள் மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றங்களைக் கண்டறிய நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக சமூக அடிப்படையிலான மறுவாழ்வுத் திட்டங்களை வலுப்படுத்த வேண்டும் எனவும் ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், குற்றவியல் விசாரணைகளை விரைவுபடுத்துவதற்காக பொலிஸ் திணைக்களத்திற்குள் நவீன தடயவியல் ஆய்வகமொன்றை அமைத்து, அறிவியல் சான்றுகளின் பகுப்பாய்வை துரிதப்படுத்துவதன் மூலம் வழக்கு நடவடிக்கைகளை விரைவுபடுத்தலாம் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: https://samugammedia.com/new-plan-to-reduce-prison-overcrowding-1787575003
