வட இலங்கை வாகன மற்றும் போக்குவரத்துத் துறையில் புதிய மைல்கல்லை எட்டும் வகையில், பிரமாண்டமான ‘AUTO X – Jaffna Motor Show 2026’ வாகனக் கண்காட்சி எதிர்வரும் செப்டம்பர் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையத்தில் நடைபெறவுள்ளது.
இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டனர். Evolution Events and Corporate Services (Pvt) Ltd நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இம்மூன்று நாள் பிரமாண்டக் கண்காட்சியில், 15,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
35-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் இக்கண்காட்சியில், புதிய வாகன விற்பனையாளர்கள், காப்புறுதி மற்றும் நிதி நிறுவனங்கள் (Finance & Insurance), வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் ஒரே கூரையின் கீழ் இணையவுள்ளனர். இதன் மூலம் வாகனங்களை நேரடியாகப் பார்வையிட்டு ஒப்பிடுவதோடு, கொள்வனவு மற்றும் நிதி வசதிகள் தொடர்பான ஆலோசனைகளையும் பெற முடியும்.
கார்கள், SUV, வேன்கள், லொறிகள், வர்த்தக வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், நவீன மின்சார வாகனங்கள் (EV Vehicles) மற்றும் மின்சார மோட்டார் சைக்கிள்களுக்குச் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
கண்காட்சிக்கு முன்னோடியாக செப்டம்பர் 3-ஆம் திகதி யாழ் நகரில் பிரமாண்ட வாகன அணிவகுப்பு நடைபெறவுள்ளது.
கண்காட்சி நடைபெறும் மூன்று நாட்களிலும் பார்வையாளர்களை சிலிர்க்க வைக்கும் விறுவிறுப்பான மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
உலகப் புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ காலப்பகுதியில் இக்கண்காட்சி இடம்பெறுவது இதன் முக்கிய அம்சமாகும். இதனால் உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் எனப் பெருந்திரளான மக்கள் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
