கொழும்பு – கொட்டாஞ்சேனை மற்றும் யக்கலமுல்லை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற கூர்மையான ஆயுதத் தாக்குதல்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்றிரவு (14) கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர், தனிப்பட்ட தகராறு காரணமாக இருவரால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, காலி – யக்கலமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகெட்டிய பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு கூர்மையான ஆயுதத் தாக்குதலில் 54 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யக்கலமுல்ல பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், முந்தைய தகராறு தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் 27 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை யக்கலமுல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இரு சம்பவங்கள் தொடர்பிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
