Home இலங்கை அரசியல் அநுரவின் கரங்களைப் பலப்படுத்த மட்டக்களப்பு மக்கள் தயார்: வேட்பாளர் பிர்தௌஸ் நளீமி

அநுரவின் கரங்களைப் பலப்படுத்த மட்டக்களப்பு மக்கள் தயார்: வேட்பாளர் பிர்தௌஸ் நளீமி

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியீட்டும் என அதன்
வேட்பாளர்களில் ஒருவரான அஷ்ஷெய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமி தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று(10)
வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தல்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதித் தேர்தலில் தோழர் அநுரகுமார திசாநாயக்க அமோக
வெற்றியீட்டியதன் மூலம் நாட்டில் மக்களுக்கு விசுவாசமானதொரு ஆட்சி
உருவாக்கப்பட்டுள்ளது. 

அந்த ஆட்சியை நாடாளுமன்றம் ஊடாக பலப்படுத்த வேண்டிய
பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. அதற்கான சந்தர்ப்பமாகவே இந்த பொதுத் தேர்தல்
அமைந்துள்ளது.

இன,மத வேறுபாடுகளைக் கடந்து இலங்கையர் என்ற அடையாளத்தின் கீழ் மக்களை
ஒன்றுதிரட்டுதல், அமையப் போகின்ற நாடாளுமன்றத்தின் ஊடாக நாட்டில் சமூக
நீதியையும் சட்டத்தின் ஆட்சியையும் நிலைநாட்டுதல், சட்டத்திக்கு முன் அனைவரும்
சமம், சட்டத்திலிருந்து எவருக்கும் விதிவிலக்களிக்க முடியாது, சட்டம் யார்
மீதும் பாரபட்சமாகப் பிரயோகிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்துதல்,
அரசியல் அதிகார துஷ்பிரயோகத்தையும் ஊழல் மோசடிகளையும் இல்லாதொழித்தல் மற்றும்
புதிய அரசியல் கலாசாரம் ஒன்றைத் தோற்றுவித்தல் ஆகிய பிரதான நோக்கங்களை
முன்வைத்தே நாம் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பொருத்தமான எட்டு வேட்பாளர்கள்
போட்டியிடுகிறோம். 

எங்கள் மத்தியில் எந்தவித வேறுபாடுகளோ விருப்பு
வாக்குகளுக்கான போட்டிகளோ இல்லை. பிரதேசவாதம் இல்லை. 

மக்கள் எமது கட்சியின் சின்னமான திசைகாட்டிக்கு வாக்களிப்பதுடன் அவர்கள் பொருத்தமானவர்கள் எனக்
கருதுகின்ற வேட்பாளர்களுக்கு தமது விருப்பு வாக்குகளை வழங்க முடியும்.

நாம் இந்த முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் முன்மாதிரியானதொரு தேர்தல்
பிரசாரத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம். 

மக்கள் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி தமது வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுவார்கள் என நம்புகிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version